நேபாள நிலநடுக்கத்தில் 41 இந்தியர்கள் பலி, 10 பேர் காயம்: நேபாள அமைச்சர் தகவல்
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி 41 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் ராம்சரண்மகத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 7,276 பேர் பலியாகினர். 14,267 பேர் காயம்அடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களில் 53 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 41 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் நேபாள நிதியமைச்சர் ராம்சரண்மகத் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர 10 இந்தியர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீட்பு பணியில் இந்திய விமானப்படையின் மீட்பு குழுவினர் கூர்கா மாவட்டத்தில் பூகம்பம் பாதித்த உள்ளடங்கிய ஹினாங்கோம்பா கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 22 புத்தமத துறவிகளை மீட்டனர். எவரெஸ்ட் சிகரம் ஏறும் இளம்வயது இந்தியர் அர்ஜுன் வாஜ்பாயும் மீட்கப்பட்டு காத்மாண்டு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நேபாளத்தில் நேற்று மீண்டும் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், திறந்த வெளியில் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
எனவே கூடாரம் அமைக்கபயன்படும் தார்பாலின் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை நேபாள அரசு ரத்து செய்துள்ளது. இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் சோதனை செய்யப்படுவதாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லட்சுமிபிரசாத் தெரிவித்துள்ளார்.