பெண்கள் தான் குறியே.. வீட்டிலேயே முடக்க தாலிபான்கள் போட்ட புது கண்டிஷன்.. இது அடக்குமுறையின் உச்சம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழங்களில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் தான் பெண்களுக்கு எதிரான இன்னொரு அடக்குமுறையை தாலிபான்கள் கையில் எடுத்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டு போருக்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு இருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்க படைகளை நாடு திரும்ப அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார்.
அமெரிக்க படைகள் முழுமையாக சொந்த நாடு திரும்பினர். இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் குளிக்க கட்டுப்பாடு.. தாலிபான்கள் போட்ட புதிய உத்தரவு..பின்னணி காரணம் என்ன?
2வது முறையாக தாலிபான் ஆட்சி
இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர். தாலிபான்கள் மதம் மீதான நம்பிக்கையில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இதனால் தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் நாட்டை விட்டு மொத்தமாக வெளியேறினர். இதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தாலிபான்கள் கூறினர். ஆனால் அவர்களின் வாக்குறுதி என்பது வெறும் வாய்சொல்லாக மட்டுமே இருந்தது.
பெண்களுக்கு கட்டுப்பாடுகள்
இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக புதுபுது கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். தாலிபான்களின் ஓராண்டு ஆட்சியில் அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வகையிலான புர்கா அணிய வேண்டும், பூங்கா, ஜிம் செல்லக்கூடாது என்பன போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
என்ஜிஓக்களில் பணியாற்ற தடை
இந்நிலையில் தான் தற்போது புதிதாக இன்னொரு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படிஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களான (என்ஜிஓ) பெண்களை பணியமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பணியில் உள்ளவர்களையும் வீட்டுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொருளாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் ஹபீப் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛நாட்டில் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு பற்றி நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. இருப்பினும் இது கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் மறுஅறிவிப்பு வரும்வரை பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை'' என தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழங்களில் பெண்களுக்கு தடை
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 5-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மீண்டும் அவர்கள் படிக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியே பாடங்கள் நடத்தப்பட்டன. சில இடங்களில் திரைச்சீலைகள் கட்டப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மாணவிகள் கல்லூரிகளுக்கு நுழைய கூடாது என்று ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இது தற்போது அமலில் உள்ளது.
போராட்டத்துக்கு நடுவே புது உத்தரவு
இதுபற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் நேதா முகமது நதீம் கூறுகையில், ‛‛பெண்களின் கல்வி விஷயத்தில் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படவில்லை. திருமண விழாவுக்கு செல்வது போல் ஆடை அணிகின்றனர். ஹிஜாப் வழிமுறையை பின்பற்றுவது இல்லை. வரம்புகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது''என்றார். இதற்க எதிராக பெண்கள் உள்பட அனைவரும் போராடி வரும் நிலையில் தான் என்ஜிஓக்களிடம் பெண்களை பணியமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.