நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் உளவுப் பிரிவு தலைவன் கைது: ராணுவம் அதிரடி
லாகோஸ்: நைஜீரியாவில் அட்டூழியம் செய்து வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் உளவாளிகளை ராணுவம் கைது செய்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, மக்களை கடத்துவது என்று அநியாயம் செய்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி சிபோக் நகரில் இருந்து 217 பள்ளி மாணவிகளை கடத்தினர். அவர்கள் இன்னும் விடுவவிக்கப்படவில்லை. மாணவிகள் இருக்கும் இடம் தங்களுக்கு தெரியும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிர் இழப்பை தடுக்க படைகளை அங்கு அனுப்பாமல் உள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகளின் உளவுப் பிரிவு தலைவனான தொழில் அதிபர் பாபுஜி யாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் சில தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாபுஜி தீவிரவாதிகளுக்கு உளவு பார்த்து வந்துள்ளார். அவர் தலைமையிலான உளவுப் பிரிவு தான் பள்ளி மாணவிகளை கடத்த, நைஜீரியாவில் உள்ள க்வோஜா பகுதியின் அரசரை கொலை செய்ய முக்கிய பங்காற்றியுள்ளது.
மூன்று சக்கர வாகன வியாபாரம் செய்து வரும் பாபுஜி கடந்த 2011ம் ஆண்டு முதல் நைஜீரியாவின் போர்னோ மாநில தலைநகரான மைதுகுரியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த உதவி செய்துள்ளார். சுங்கத்துறை, ராணுவ இடங்களில் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் மைதுகுரியில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்ததிலும் பாபுஜிக்கு முக்கிய பங்கு உள்ளது.
இது குறித்து மேஜர் ஜெனரல் ஒலுகொலடே கூறுகையில்,
பாபுஜியின் கைதை அடுத்து ஹப்சத் போகோ என்ற பெண் உள்ளிட்ட பல உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண் உளவானியான ஹஜ் காகாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை 13 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications