ஏவுகணையை சோதித்ததா இல்லை செயற்கைக் கோளை ஏவியதா?.. வட கொரியாவால் புது பரபரப்பு
சியோல்: வட கொரியாவில் ஒரு புது பரபரப்பும், படபடப்பும் ஏற்பட்டுள்ளது. அது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணையை ஏவிப் பரிசோதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் செயற்கைக் கோளை மட்டுமே அது ஏவியதாக இன்னொரு செய்தி கூறுகிறது.
ஆனால் வட கொரியாவின் இந்த புதிய செயலால் பக்கத்து வீடான தென் கொரியாவும், இருவருக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக முயலாமல் மோத வி்ட்டு வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவும் கோபத்துடன் இதைக் கண்டித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனையை செய்து பார்த்துள்ளது வட கொரியா. செயற்கைக் கோளை ஏவியதாக வட கொரிய அரசுத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது ஏவுகணை சோதனை என்று அமெரிக்காவும், தென் கொரியாவும் கூறியுள்ளன.
தடையாவது ஒன்னாவது
வட கொரியா மீது ஐ.நா. பல்வேறு கடுமையான தடைகளை விதித்துள்ளது. ஆனாலும் வட கொரியா அதைக் கண்டு கொள்வதே இல்லை. தனது வேலையை தொடர்ந்து அது செய்து கொண்டுதான் உள்ளது.
அணு குண்டு சோதனைக்குப் பின்னர்
சில வாரங்களுக்கு முன்புதான் அது அணு குண் சோதனையை நடத்திப் பார்த்தது. இந்த நிலையில் தற்போது அதி நவீன ஏவுகணையை அது ஏவிப் பார்த்துள்ளது. ஆனால் அதை செயற்கைக் கோள் ஏவுதல் என்று அது கூறியுள்ளது.
உண்மையா இருக்கலாமோ..!
வட கொரியா சொல்வது உண்மையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. காரணம், வட கொரியாவின் ராக்கெட்டிலிருந்து ஒரு பொருள் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக அமெரிக்காவிலிருந்தே ஒரு தகவல் வந்துள்ளது. அது செயற்கைக் கோளாகத்தான் இருக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
க்வான்கிம்யான்சாங்-4
இந்த செயற்கைக் கோளுக்கு க்வான்கிம்யான்சாங் -4 என்று பெயர் என்றும் வட கொரியா கூறியுள்ளது. மறைந்த கிம் ஜோங் இல் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூற்படுகிறது. செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாகவும் வட கொரியா கூறியுள்ளது.
2012க்குப் பிறகு
கடைசியாக 2012ம் ஆண்டுதான் நீண்ட தொலைவு ராக்கெட்டை வட கொரியா செலுத்தியிருந்தது. அப்போது தொலைத் தொடர்பு செயற்கைக் கோளை அது விண்ணில் செலுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் அந்த செயற்கைக் கோளிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை.
டுபாக்கூராக இருக்கலாம்
எனவே இந்த முறையும் அது உண்மையிலேயே செயற்கைக்கோளைத்தான் செலுத்தியதா என்பதில் அமெரிக்க அரசுக்குச் சந்தேகம் இன்னும் உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலை சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் உறுதி செய்துள்ளன.