பிரதமருக்குகே ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்த போலீஸ்.. மன்னிப்பு கேட்டும் விடவில்லை.. எங்கு தெரியுமா?
ஓஸ்லோ.(நார்வே): கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வேயில் பிரதமருக்கே 1.70லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் அந்நாட்டு போலீசார். ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மை தான்.. சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது நார்வேயில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஊர் மக்களும் அதை உறுதியாக நம்புகிறார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. பிரேசில். இந்தியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து உள்பட பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயின் தாக்கம் குறையவில்லை. உயிரிழப்பும் அதிகமாகவே உள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கட்டுப்பாடுகள்
இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. பொதுவாக ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசு உள்ளவர்களின் பக்கம் பாயாது என்று நம்பப்படுகிறது. அதிலும்குறிப்பாக ஆட்சி செய்வோர் மீது பாய்வது என்பது நடக்காத காரியம். இந்த சூழலில் நார்வேயில் பிரதமருக்கு எதிராக சட்டப்படி போலீசார் தனது கடைமையை செய்துள்ளார்கள்.

பிரதமருக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறியதாக நார்வே போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் எர்னா சோல்பெர்க்கிற்கு நார்வே நாட்டு பணமதிப்பில் 20000 கிரவன்ஸ் அபராதம் விதித்துள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் 1.70லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு காவல்துறை தலைவர் ஓலே சாவெருட் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.

பிறந்த நாளில் விதிமீறல்
எதற்காக அபராதம் விதித்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம். நார்வேயில் கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானதுஎந்தவொரு நிகழ்விலும் 10 பேருக்கு மேல் கூடக் கூடாது' என்பது தான். ஆனால் நர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, தனது 60-வது பிறந்தநாளைத் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் 13 பேர் கலந்துகொண்டனர். இதனால், அரசின் கட்டுப்பாட்டை பிரதமரே மீறிவிட்டார் என சர்ச்சை கிளம்பியதும், தாமாகவே முன்வந்து மன்னிப்பும் கேட்டார்.

சரியான விளக்கம்
இருந்தபோதிலும், பிரதமர் எர்னா சோல்பெர்க் கொரோனா விதிமுறையை மீறியதற்காக அந்நாட்டு காவல்துறை, வெள்ளிக்கிழமை அன்று ரூ.1,75,000 (20,000 Norwegian crowns) அபராதம் விதித்து உத்தரவிட்டது. இது குறித்து, நார்வேயின் தலைமை காவல் அதிகாரி ஓலே சாவெருட் (Ole saeverud),சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருப்பதில்லை. சமூகக் கட்டுப்பாடுகள் குறித்த அரசின் விதிகளில், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது சரிதான்" என்று விளக்கம் அளித்துள்ளார். சரியான விளக்கம் தானே.. !












Click it and Unblock the Notifications