நேபாளத்து நிலநடுக்கம்...லேசான சேதத்துடன் தப்பிய பசுபதிநாதர் கோயில்! பக்தர்கள் நிம்மதி!!
காத்மண்டு: நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவில் லேசாதன சேதத்துடன் தப்பியுள்ளது பக்தர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.
நேபாளம் நாட்டை நிலநடுக்கம் உருக்குலைத்து போட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3700-ஐ தாண்டியது. 6,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பீம்சென் டவர்
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்த, ‘பீம்சென் கோபுரம்' என்று அழைக்கப்பட்டு வந்த ‘தாரஹரா கோபுரம்' நிலநடுக்கத்தில் தரைமட்டம் ஆகிவிட்டது. இந்தக் கோபுரம் 1832-ம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்கது. 9 அடுக்குகளை கொண்டதும், 203 அடி உயரம் உடையதுமான இந்த கோபுரத்தை காத்மண்டுவின் கட்டிடக் கலையாக ‘யுனெஸ்கோ' அங்கீகரித்திருந்தது.
பசுபதிநாதர் கோவில்..
இதே போன்று இந்தியாவின் ஆன்மிக பயணிகளை பெரிதும் கவர்ந்து வந்த பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவில், நில நடுக்கத்துக்கு பின்னர் என்ன ஆயிற்று என்று உறுதியான எந்ததகவலும் வெளியாகாமல் இருந்தது. .இந்நிலையில் நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.
கிடைத்த இடத்தில் தகனம்
மேலும் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட போதிய தகன மேடை வசதி இல்லை. இதன் காரணமாக எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மொத்த மொத்தமாக உடல்களை தகனம் செய்கின்றனர்.
ஒரே இடத்தில் 100 உடல்கள்...
பிரசித்தி பெற்ற பசுபதி நாதர் கோவில் அருகே அமைந்துள்ள தகன மையத்தில் கடும் இட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தகன மையத்துக்கு வெளியே கிடைத்த இடத்தில் எல்லாம் உரிய இறுதிச்சடங்குகளை முறையாக செய்ய முடியாமல் உடல்களை தகனம் செய்து வருகின்றனர். நேற்று அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பசுபதிநாதர் கோவிலுக்கு துளியும் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.