நாட்டு வளர்ச்சிக்கு எதிராக போலி போராளிகள் பொங்குகிறார்களாம்.. சொல்வது வேதாந்தா அனில் அகர்வால்
Recommended Video

லண்டன்: மக்களாட்சியை மக்கள் தப்பாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என கூறியுள்ளார் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர (copper) உருக்காலை நடத்தி வருகிறது வேதாந்தா குழுமம். இதன் தலைவர் அனில் அகர்வால் லண்டனில் வசித்து வருகிறார்.
தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தி வருகிறது என்பது மக்கள் குற்றச்சாட்டு. இதையடுத்து ஆலையை மூட கோரி தொடர்ந்து மக்கள் போராடி வருகிறார்கள். உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு இன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தின்போது, அதை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

உலகமே இயங்காது
இதனிடையே தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு லண்டனில் இருந்தபடி சிறப்பு பேட்டியளித்துள்ளார் அனில் அகர்வால். அவர் கூறியுள்ளதை பாருங்கள்: தாமிரம் என்பது மிகவும் மதிப்புமிக்க உலோகம். தாமிரம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது. நமது நாட்டை தாமிர பொருள் சந்தையாக அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வருத்தம்
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு, "13 அப்பாவிகள் கொல்லப்பட்டதில் எனக்கு வருத்தம்தான். பொறுப்பான கார்பொரேட் என்ற வகையிலும், மற்றும் மனிதாபிமானம் அடிப்படையிலும் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கும், காயமடைந்தோருக்கும் முடிந்த அளவுக்கு ஆதரவை தர நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் ஆலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பதால் இயங்காமல் உள்ள நிலையில் இந்த போராட்டம் நடந்துள்ளது துரதிருஷ்டவசமானது. பொய் பிரச்சாரங்கள் உண்மையை அமுக்கிவிடுகின்றன.

சுற்றுச்சூழல்
இப்போது உள்ளதைவிட எங்கள் தொழில் 7 மடங்கு வளரும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து தாமிரத்தை நேபாளம், வங்கதேசத்திற்கு சப்ளை செய்ய முடியும். வாழ்க்கை முழுக்க நாம் இறக்குமதி மட்டும் செய்து கொண்டிருக்க முடியுமா என்பதே எனது கேள்வி. உலகின் எந்த நாட்டைவிடவும், நாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் கொடுத்துதான் ஆலையை இயக்கி வருகிறோம். உலகின் தலை சிறந்த 25 சூழலியலாளர்களை கொண்டு, எங்கள் சுற்றுச்சூழலை ஆய்வு செய்துள்ளோம்" என்று பதிலளித்துள்ளார்.

போலி போராட்டக்காரர்களாம்
உள்ளூர் மக்களின் போராட்டத்திற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "போலி போராட்டக்காரர்கள் பொய் செய்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர். போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே எங்கள் ஆலைக்குள் வந்து மாசு வெளியாகிறதா என்பதை நேரில் பார்க்க மக்களுக்கு அழைப்புவிடுப்பது வழக்கம். இதேபோல போராட்டக்காரர்களையும் அழைத்தோம். ஆனால் யாருமே வந்து பார்க்கவில்லை. மக்களின் சந்தேகங்களை தீர்க்க விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கடலில் கலக்காதாம்
வளர்ச்சிக்கு எதிரான அமைப்புகள், குழுக்கள், பொதுமக்களின் உணர்வுகளை தூண்டி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தடுத்து வருகின்றன. பொய் செய்திகளால் பாதிக்கப்பட்டதில் ஸ்டெர்லைட்டும் ஒன்று. அவர்களால்தான் அப்பாவிகள் இப்போது உயிரிழந்துள்ளனர். இந்திய தொழில்துறையை முடக்குவது அவர்கள் நோக்கம். தூத்துக்குடியில் உள்ள பல தொழிற்சாலைகள் கழிவுகளை கடலில் கலக்க செய்கின்றன. ஆனால் ஸ்டெர்லைட் Zero Liquid discharge plants மூலமாக ஒரு சொட்டு கழிவும் ஆலையை விட்டு வெளியே போகாமல் தடுக்கிறது. இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications