பிலிப்பைன்ஸ்: ஹையான் புயலால் படகை இழந்த மீனவர்கள்... பிரிட்ஜை படகாக்கினர்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டையே புரட்டிப் போட்ட ஹையான் புயலால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உண்ண போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் போராடும் அங்குள்ள மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு தரும் நிவாரணங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தால் உயிர் வாழ இயலாது எனக் கருதிய அங்குள்ள மீனவர்கள், புயலால் உருக்குலைந்து போன தங்களது படகுகளுக்கு மாற்றாக பழைய குளிர்சாதனப் பெட்டிகளை பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஹையான் புயல்....
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், பிலிப்பைன்ஸை அதிபயங்கரமான ஹையான் புயல் தாக்கியது. இப்புயலில் சிக்கி 10 ஆயிரம் பேர் பலியானார்கள். அந்நாட்டின் டக்லோபன் நகரம் தான் அதிகளவில் புயலால் பாதிக்கப்பட்டது.
போராட்டம்....
மீட்புப் படையினர் தாமதமாக வந்ததே உயிர்ப்பலி அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப் பட்டு வரும் வேளையில், விமானம் மூலம் வீசப்படும் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை கைப்பற்றுவதில் பாதிக்கப் பட்ட மக்களிடையே பெரும் போட்டி நிலவுகிறது.
நிவாரண உதவி...
இந்நிலையில், இந்நகரையொட்டி அமைந்துள்ள டனவுயான் என்ற கடலோர கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள் ஹையான் புயலால் தங்கள் படகுகளை இழந்தனர். அரசின் நிவாரண உதவி கிடைக்க காலதாமதமாகலாம் என எண்ணிய மீனவர்கள் அதிரடியாக புதிய படகுகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
படகான பிரிட்ஜ்....
அதாவது, புயலில் சிக்கி தெருக்களில் உடைந்து கிடந்த குளிர்சாதனப் பெட்டிகளின் இருபுறமும் நீண்ட கம்புகளைக் கட்டியபடி, படகுகள் போல பயன்படுத்தி அவற்றின் உதவியுடன் மீன்பிடித்து வருகின்றனர் அப்பகுதி மீனவகள்.
இது போதுமே...
இந்த ஒட்டுப் படகுகளால் கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே செல்ல முடியும் என்ற போதும், அதன்மூலம் கிடைக்கின்ற மீன்கள் தற்போதைக்குப் போதுமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.