அமெரிக்க கால்நடை பண்ணையில் புகுந்து காளைகளின் விந்தணுக்களைத் திருடிச் சென்ற மர்மநபர்கள்
மின்னசோட்டா: அமெரிக்காவில் கால்நடை பண்ணையில் புகுந்த மர்மநபர்கள் சிலர் அங்கிருந்த உயர்ரக காளைகளின் விந்தணுக்களைத் திருடிச் சென்றுள்ளனர். திருடு போன விந்தனுக்களின் மதிப்பு சுமார் ரூ. 45 லட்சம் ஆகும்.
அமெரிக்காவில் மின்னசோட்டா நகரில் கால்நடை பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கால்நடை வளர்ப்போர் தங்கள் பசுக்களுக்கு மரபணு மாற்று முறையில் செயற்கைக் கருவூட்டல் செய்வதற்காக விந்தணுக்களை வாங்கிச் செல்வது வழக்கம். இதற்காக இங்கு உயர்ரக காளைகளின் விந்தணுக்கள் சிறிய குப்பிகளில் சேமிக்கப்பட்டு, உலோகப் பெட்டியில் வைத்து குளிர்பதனப் படுத்தி வைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த கால்நடை பண்ணைக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்து விந்தணுக் குப்பிகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் எனக் கூறப்படுகிறது. சராசரியாக ஒரு குப்பியின் விலையே ரூ. 9 லட்சம் ஆகும். அது அந்தந்த காளைகளின் பூர்வீகத்தை பொறுத்து மாறுபடும்.
திருடர்கள் அந்த விந்தணுக் குப்பிகளை தவிர வேறு எதையும் திருடவில்லை என்றும், விந்தணுக்கள் இருப்பதும், அதன் மதிப்பும் பண்டகசாலை பொறுப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.