யு.எஸ்: கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார போலீஸ்காரர் ராஜினாமா
பெர்குஷன்: அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார போலீஸ்காரரான டாரன் வில்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் உள்ள பெர்குஷன் நகரில் வெள்ளைக்கார போலீஸ்காரரான டாரன் வில்சன் நிராயுதபாணியாக இருந்த கருப்பினத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கேல் பிரவுனை சுட்டுக் கொன்றார். இதையடுத்து வில்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூறி பெர்குஷன் நகரில் 100 நாட்களுக்கும் மேல் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வில்சன் மறைவான இடங்களில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் பிரவுன் கொல்லப்பட்ட விவகாரத்தில் வில்சன் மீது குற்றம் சாட்டப் போவது இல்லை என்று திங்கட்கிழமை அறிவித்தது. இதையடுத்து மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் வில்சன் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் போலீஸ் பணியை துவங்கிய வில்சன் மீது இதுவரை எந்தவித புகாரும் வந்தது இல்லை. இந்நிலையில் தான் அவர் பிரவுனை கொன்ற வழக்கில் தானாக ராஜினாமா செய்துள்ளார்.
வில்சன் பிரவுன் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் வேண்டும் என்றே சுட்டுக் கொன்றதாக மக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.