ஜெயிலுக்குப் போகிறார் ஒபாமா...!
ஆக்லஹோமா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆக்லஹோமா நகரில் உள்ள சிறைக்கு வருகிற வியாழக்கிழமை செல்கிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும்போது சிறைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
ஆக்லஹோமா நகருக்குச் செல்லும் ஒபாமா, அங்கு எல் ரினோ என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலைக்கு விஜயம் செய்கிறார். அங்கு அவர் சிறை அதிகாரிகள், கைதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
ஒபாமா கிரிமினல் சட்டத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவில் பல மாகாணங்களில் சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது. குறிப்பாக கிரிமினல் சட்டத்தின் கீழ் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இதனால் கருப்பர் இனத்தவர்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். காரணம், அவர்கள்தான் இந்த சட்டத்தின் கீழ் அதிக அளவில் கைதாகின்றனர்.
பல மாகாணங்களில் குறிப்பிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கருப்பர் இனத்தவர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டவே ஒபாமா சட்டத் திருத்தம் குறித்து யோசித்து வருகிறார். இதுதொடர்பாகவும் அவரது சிறை விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வாரத்தில் பல கைதிகளுக்கு ஒபாமா பொது மன்னிப்பு அளிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கு முன்பு வன்முறை அல்லாத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பல கைதிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார் ஒபாமா என்பது நினைவிருக்கலாம்.