பெயர் சூட்டு விழா: செல்லப்பேரன் ஜார்ஜுக்கு பூந்தோட்டத்தை பரிசாக தரும் தாத்தா சார்லஸ்
லண்டன்: இன்று நடைபெற உள்ள குட்டி இளவரசர் ஜார்ஜின் பெயர் சூட்டு விழாவிற்காக பூந்தோட்டம் ஒன்றை பரிசாகத் தர இருக்கிறாராம் இளவரசர் சார்லஸ்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லஸ்-டயானாவின் மகனுமான இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட்டுக்கு கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இன்று கிறிஸ்தவ மத வழக்கப்படி பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது.

ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்...
கேட்- வில்லியம் தம்பதிகள் தங்கள் முதல் வாரிசான குட்டி இளவரசருக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். இக்குழந்தை அரச பரம்பரையின் 7ம் வாரிசு என்பதால் கிங் ஜார்ஜ் செவன் என்றும் அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் சூட்டு விழா...
இன்று கிறிஸ்தவ முறைப்படி தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த உள்ளனர் அரச தம்பதிகள். இந்தப் பெயர் சூட்டு விழா, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ராயல் சேப்பலில் கான்டர்பெர்ரி பேராயரான ரெவ்.ஜஸ்டின் வெல்பியால் நடத்தப்பட உள்ளது.

திருவிழா...
பொதுவாகவே அரச குடும்பத்து விழாக்கள் திருவிழாவாக பொதுமக்களால் குதூகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தப் பெயர் சூட்டு விழாவின் நினைவாக நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாணய வடிவமைப்பு...
இந்த நாணயத்தின் வடிவமைப்பு, அளவுகள், பொருட்கள் போன்றவை குழந்தையின் பெற்றோர் மற்றும் பாட்டி இரண்டாம் எலிசபெத் ஆகியோரால் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் எளிதாக வாங்கக்கூடிய 21 டாலர் மதிப்பில் உள்ள 13 பவுண்ட் காசிலிருந்து தொடங்கி ஒரு கிலோ தங்க மதிப்புள்ள (80,000 டாலர்) 50,000 பவுண்ட் மதிப்பு வரை காசுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

விழா நினைவாக....
நரம்பால் இசைக்கப்படும் யாழில் விளையாடும் இரண்டு தேவர்கள் புடைசூழ 2013 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் பிறந்த இளவரசர் ஜார்ஜின் பெயர்சூட்டு விழாவின் நினைவாக என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி நாணயம்....
இதுதவிர ஒரு சிறப்பு வெள்ளி நாணயமும் அவரது பிறப்பைக் குறிப்பிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பூவிற்கு பதிலாக பூந்தோட்டம்....
இந்நிலையில் தனது பேரனின் பெயர் சூட்டுவிழாவின் போது பூ தந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு ரோமானிய நாட்டின் டிரான்சில்வேனியா குன்று பகுதியில் உள்ள பெரிய பூந்தோட்டம் ஒன்றையே பரிசாக வழங்க டயானாவின் கணவரும் இளவரசர் வில்லியம்மின் தந்தையுமான இளவரசர் சார்லஸ் முடிவு செய்துள்ளாராம்.

அன்பினால் பூத்த பூ வாடாது...
இது குறித்து இளவரசர் சார்லசின் நீண்டகால நண்பரும் டிரான்சில்வேனியா பகுதியில் உள்ள அவரது சொத்துகளை நிர்வகித்து வருபவருமான கவுண்ட் டிபோர் கல்னோக்கி கூறியதாவது, ‘பெயர் சூட்டு விழாவின் போது பூக்களை பரிசாக தந்தால் அவை வாடிப்போய் விடும். ஆனால், பூந்தோட்டங்கள் தினந்தோறும் புதுப்புது பூக்களை தந்து மணம் பரப்பும். அது மட்டுமின்றி இந்த பூந்தோட்டத்தின் மலர்கள் குட்டி இளவரசருக்கு அவரது பாட்டனார் அளித்த அன்பளிப்பு என்பதை நினைவில் கொண்டு அவற்றை இப்பகுதி மக்களும் பத்திரமாக பாதுகாப்பார்கள். இதனால், இந்த பகுதியும் ரம்மியமாக காட்சியளிக்கும்' என்றார்.

மூன்றாவது தலைமுறை....
இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம்சிற்குப் பின் அரியணைக்கு வரும் மூன்றாவது அரச குடும்பத்து வாரிசு இந்தக் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications