தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்சேவை வெளியே விடுங்க... திருகோணமலையில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் போராட்டம்
திருகோணமலை: தென்னிலங்கை சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள், திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
அன்று அனுமன் வைத்த தீ... இன்று மக்கள் வைத்த தீ... பற்றி எரியும் இலங்கை - தமிழர்கள் சாபம் விடுமா?
இலங்கையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ராஜபக்சே கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதனால் வெகுண்டெழுந்த சிங்களர்கள் ராஜபக்சே, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக உக்கிரப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் தென்னிலங்கையே நேற்று பற்றி எரிந்தது.
யார் யாருக்கு பாதிப்பு?
ராஜபக்சேக்களின் குடும்ப கல்லறை, பூர்வீக வீடுகள் தொடங்கி சனத் நிஷாந்தவின் வீடு; திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு; குருநாகல் மேயர் மாளிகை; ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்; மொரட்டுவை மேயரின் வீடு; அனுஷா பாஸ்குவலின் வீடு; பிரசன்ன ரணதுங்கவின் வீடு; ரமேஷ் பத்திரனவின் வீடு;சாந்த பண்டாரவின் வீடு;ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை; நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்; அருந்திகவின் வீடு; கனக ஹேரத்தின் வீடு; காமினி லொகுகேவின் வீடு; காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு; மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்; லான்சாவின்-2 வீடுகள்; வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு;அலி சப்ரியின் வீடு; பந்துல குணவர்தன வீடு; வீரகெட்டிய மெதமுலன வீடு; கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ் ; கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்; கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் ; விமல் வீரவன்சவின் வீடு; அசோசியேட் சூப்பர் சென்டர் காலி ; சிறிபால கம்லத் வீடு ; கெஹலிய ரபுக்வெல்ல வீடு; ரோஹித அபேகுணவர்தன இல்லம் ; நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் ; காஞ்சனா விஜேசேகர இல்லம் ; துமிந்த திசாநாயக்க வீடு ; ஞானாக்கா வீடு என அத்தனையும் தீக்கிரையாக்கப்பட்டன.
தப்பி ஓடிய ராஜபக்சே குடும்பம்
இதனால் தென்னிலங்கையில் இனி உயிர்வாழ முடியாது என அஞ்சி கொழும்பில் இருந்து இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு ராஜபக்சே குடும்பங்கள் தப்பின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஏற்கனவே ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக் கூடாது என்பதற்காக விமான நிலையங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு காத்திருக்கின்றனர்.
மக்கள் போராட்டம்
இந்த நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சமடைந்த தகவல் காட்டு தீயாக பரவியது. இதனையடுத்து திருகோணமலை கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் ராஜபக்சே குடும்பத்தை கடற்படை முகாமில் இருந்து வெளியேற்றவும் வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்துவதால் பதற்றம் நிலவுகிறது.