உக்ரைன் விவகாரம்: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!
மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது. இது போல் கிழக்கு உக்ரைனும் ரஷ்யாவுடன் சேர விரும்புகிறது.
ஆனால் இதற்கு உக்ரைன் சம்மதிக்கவில்லை. அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் படையினருடன் போரிட்டு வருகின்றனர். இந்த மோதலில் டோன்கெட்ஸ் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களில் 2,600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு உக்ரைன் பகுதியில் பாதிக்கபட்ட மக்களுக்கு ரஷ்யா நிவாரண பொருட்களை அனுப்பியது ஆனால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து அந்த நிவாரண பொருட்கள் லாரிகள் திரும்பின.
இந்த நிலையில் ரஷ்யா வீரர்கள் 10 பேரை எல்லை தாண்டியதாக கூறி உக்ரைன் ராணுவம் பிடித்து வைத்து உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயற்சி செய்யும் என அந்நாட்டு பிரதமர் யாட்சென்யூக் தெரிவித்து உள்ளார். கிழக்கு உக்ரைனின் நடைபெறும் வன்முறைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என நேட்டோ அமைப்பும் ஐ.நாவும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் பெலாரஸின் மின்ஸ்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிறகு பேட்டி அளித்த ரஷ்யா அதிபர் புதின், மேற்கத்திய நாடுகளை அணு ஆயுதத்துடன் எதிர்கொள்ள சந்திக்க தயாராக இருக்கிறோம். இதை மற்ற நாடுகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் ரஷ்யா இந்துவரை பெரிய அளவிலான மோதல்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. ஆனால் இயற்கையாக பெரிய ஆக்கிரமிப்பை தடுக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யா மிகவும் சக்தி வாய்ந்த அணு நாடுகளில் ஒன்று. இது உண்மையானது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் புதின்.