இதுதான் ஆர்சிபி.. முக்கியமான போட்டியில் வழக்கம் போல சொதப்பல்! எங்கே நடந்தது தப்பு? ஈ சாலா கப் இல்லா
சார்ஜா: ஐபிஎல் தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மிக மோசமாக பேட்டிங் செய்து சொதப்பியது விராட் கோலி தலைமையிலானயது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதுதான் அந்த அணி தோல்விக்கு முக்கியக் காரணமாக மாறியது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன நல்ல செய்தி
குவாலிபையர் ரவுண்டில் சிஎஸ்கே வெற்றி பெற்று நேராக பைனலுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டது. இந்த நிலையில்தான் இன்று சார்ஜா மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெற்றது.
நடையைக் கட்ட வேண்டியதுதான்
இதில் வெற்றி பெறும் அணி டெல்லி கேப்பிடல் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும். இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி அப்படியே ஊரைப் பார்த்து நடையை கட்டிவிட வேண்டியதுதான்.
முக்கியமான போட்டி
எலிமினேட்டர் சுற்று போட்டி என்பது வாழ்வா சாவா போன்ற ஒரு போட்டித் தொடர். எனவே இதில் முழு திறமையையும் காட்டி ஆட வேண்டிய நிலைமையில் இரு அணிகளும் இருந்தன. ஒருவகையில் இதில் ஆர்சிபி அணிக்கு இதில் அட்வான்டேஜ் இருந்தது. ஏனென்றால் லீக் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளை எடுத்திருந்தது ஆர்சிபி. புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. மும்பை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாததால் உள்ளே வந்ததுதான் கேகேஆர்.
சொதப்பி தள்ளியது
அப்படியிருந்தும், இன்றைய போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூர் அணி சொதப்பி தள்ளி விட்டது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அந்த அணியால். இத்தனைக்கும் பவர் பிளே என்று சொல்லக்கூடிய முதல் 6 ஓவர்களில் ரன் ரேட் சிறப்பாக இருந்தது. ஆறாவது ஓவரின் முதல் பந்தில் படிக்கல் அவுட் ஆனார். அப்போது அணி ஸ்கோர் 49. ஆனால், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய ஸ்பின்னர்கள் களத்தில் வந்த பிறகு "படுத்தேவிட்டான் ஐயா" என்று சொல்வார்களே அது போல சிங்கிள் ரன்களாக ஓட ஆரம்பித்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள். பெங்களூர் அணியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்தது கேப்டன் விராட் கோலி. 39 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு அவர் சந்தித்த பால்கள் எண்ணிக்கை 33.
ஏமாற்றிய மேக்ஸ்வெல்
சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய வீரர் மேக்ஸ்வெல். ஆனால் அவரும் இன்று சரணடைந்தார். 15 ரன்களில் நடையைக் கட்டினார். ஆனால் அதற்கு அவர் சந்தித்த பந்துகள் எண்ணிக்கை 18.
கலக்கிய சுனில் நரைன்
இது முக்கியமான போட்டி என்பதால் சீனியர் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது தோளில் பொறுப்பை சுமப்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் 11 ரன்களில் அவர் கிளீன் போல்டாகி அவுட்டானார். இந்த மூன்று மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களையும் வீழ்த்தியது சுழற்பந்து புயல் சுனில் நரைன். போனசாக பரத் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். 4 ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை சுனில் நரேன் சுழற்றி எறிந்தார். ஒட்டுமொத்த பெங்களூர் அணி ஜாம்பவான்களும் சுனில் நரைனிடம் சரணடைந்து விட்டனர். வருண் சக்கரவர்த்தி பந்தில் விக்கெட் விழவில்லையே தவிர ரன்களை கொடுக்காமல் சிக்கனமாக வீசி அசத்தினார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
எப்போதுமே இப்படித்தான்
பெங்களூர் அணி திறமையான பல வீரர்களை கொண்டிருந்தாலும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடாமல் விட்டது ஒரு காரணம். எனவேதான், சோக்கர்கள் என்று ஆர்சிபி அழைக்கப்படுகிறார்கள். உலக கிரிக்கெட்டில் இப்படி தென்னாப்பிரிக்கா அணி என்றால், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி இப்படி அழைக்கப்படுகிறது. திறமையாளர்கள் இருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாத அணிகள் என்பதால் இந்த மாதிரி ஒரு பட்டப்பெயர் வைத்து அழைக்கப்படுகிறது.
ஆர்சிபி கேப்டனாக கடைசி போட்டி
இன்றும் அவர்கள் அப்படித்தான் ஆடினார்கள். இத்தனைக்கும் கேப்டன் விராட் கோலி பெங்களூர் அணியின் தலைவராக ஆடும் கடைசி போட்டி இதுதான் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அப்படி இருந்தும் வழக்கம் போல நடுக்கத்தின் காரணமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஆர்சிபி செய்த தவறு
சுனில் நரைன் பந்துகளை கிரீஸை விட்டு இறங்கி வந்து நேராக அடித்து இருக்கலாம். ஆனால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அதை செய்யவில்லை. சிஎஸ்கே அணியின் டுப்ளசிஸ், ருத்ராஜ் கெய்க்வார்ட் ஆகியோர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை இப்படித்தான் எதிர்கொள்வார்கள். இத்தனைக்கும் சார்ஜா மைதானம் நேராக குறுகிய பவுண்டரி எல்லையை கொண்டது. ஆனால் அதை பேட்ஸ்மென்கள் டார்கெட் செய்யவில்லை. குறுக்காக பேட்டை போட்டு சுழற்றி அதன்மூலமாக அவுட் ஆகினர். விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய மூன்று பேருமே சுனில் நரைன் பந்து வீச்சில் நேராக அடிக்காமல் பக்கவாட்டில் அடிக்க முற்பட்டு அவுட்டானதை கவனிக்க முடிந்தது. பந்துவீச்சாளர்களுக்கு எந்த நெருக்கடியும் தராமல் இதுபோன்ற மட்டமான ஷாட்கள் அடித்ததன் காரணமாக சொதப்பி தள்ளியது ஆர்சிபி. முக்கியமான இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்கள் வரிசையாக இருந்த போதிலும் பெங்களூர் அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. ரிஸ்க் எடுத்து விடக்கூடாது என்று அவர்கள் எந்த அளவுக்கு பதட்டத்தில் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் கூட ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார். இதுதான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசம். எனவே கேகேஆர் எளிதாக பேட் செய்ய முடிந்தது. முக்கியமான போட்டிகளில் பதற்றத்தால் கோட்டை விடுவது இந்த சீசனிலும் ஆர்சிபி அணியின் வழக்கமாக தொடர்ந்து விட்டது.