கல்லால் அடியுங்கள், நீரில் மூழ்கடியுங்கள், காரை ஏற்றிக் கொல்லுங்கள்.. 2014லேயே எச்சரித்த ஐஎஸ்ஐஎஸ்
பாரிஸ்: கார்களை உங்கள் மீது ஏற்றி கொடூரமாக நசுக்கிக் கொல்வோம். சந்திக்கத் தயாராக இருங்கள் என்று 2014ம் ஆண்டிலேயே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்திருந்தனர். இதுதொடர்பாக ஒரு வீடியோவும் அப்போது வெளியானது.இப்போது பிரான்சின் நைஸ் நகரில் அதுதான் நடந்துள்ளது.
கார்களையும், கார்களில் ஆயுதங்களை ஏற்றி அதை வைத்தும் உங்களை கூட்டம் கூட்டமாக கொல்வோம். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். சந்திக்க நீங்களும் தயாராக இருங்கள் என்று அப்போது தீவிரவாதிகள் எச்சரித்திருந்தனர். குறிப்பாக அமெரிக்கர்களையும் பிரெஞ்சு மக்களையும் குறி வைத்து அந்த எச்சரிக்கையை அப்போது ஐஎஸ் அமைப்பு விடுத்திருந்தது.
இன்று நைஸ் நகரில் நடந்துள்ள தாக்குதல் கிட்டத்தட்ட அன்று சொன்னது போலவே உள்ளது. ஐஎஸ் மட்டுமல்லாமல், அல் கொய்தா அமைப்பும் கூட கார்களை ஏற்றி மேலை நாட்டவரைக் கொன்று குவியுங்கள் என்று முன்பு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நைஸ் நகரில், 31 வயதான துனிஷியாவை பூர்வீகமாக கொண்ட நபர் 25 டன் எடை கொண்ட லாரியை மக்கள் மீது ஏற்றிக் கொன்றதில் 80 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த அபு முகம்மது அல் அத்னானி என்பவர் தனது அமைப்பினருக்கு வீடியோ மூலம் விடுத்த செய்தியில்தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். கார்களையும்,பாறைகள், கத்திகள் என கிடைக்கும் ஆயுதங்களையும் வைத்து மேற்கத்திய நாட்டினரை குறிப்பாக அமெரிக்கர்கள், பிரெஞ்சுக்காரர்களைக் கொன்று குவிப்போம் என்று அவர் கூறியிருந்தார்.
அவர் கூறுகையில், உங்களுக்கு வெடிகுண்டுகள் கிடைக்கவில்லையா, துப்பாக்கி கிடைக்கவில்லையா,கவலைப்படாதீர்கள். கற்களை எடுத்துக் கொல்லுங்கள், பாறையால் தலையை நசுக்குங்கள், கத்தியால் குத்திக் கொல்லுங்கள். கார்களையும், வாகனங்களையும் பயன்படுத்திக் கொல்லுங்கள்,உயரமான இடத்திலிருந்து கீழே தள்ளி விடுங்கள். விஷம் கொடுத்துக் கொல்லுங்கள், நீரில் மூழ்கடித்துக் கொல்லுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.
தற்போது நடந்துள்ள சம்பவத்தைப் பார்த்தால் அவர் கூறியதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு இன்றைய தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.