ஐஎஸ்-ஸால் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது.. ரஷ்யா மறுப்பு
மாஸ்கோ: எகிப்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தை தாங்கள் தான் தாக்கியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த கோகலிமாவியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 217 பயணிகள், 7 விமான ஊழியர்களுடன் எகிப்தில் உள்ள சினாய் செங்கடல் கடற்கரை நகரமான ஷரம் எல் ஷேக்கில் இருந்து ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சனிக்கிழமை கிளம்பியது.
விமானம் கிளம்பிய 20 நிமிடத்தில் சினாயில் உள்ள நெகேல் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியாகினர். பலியானவர்களில் 138 பேர் பெண்களும், 17 குழந்தைகளும் அடக்கம். விமானத்தில் இருந்த பயணிகளில் 3 பேர் மட்டும் உக்ரைனைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தாங்கள் தான் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் சினாய் மாகாணத்தில் ரஷ்யர்களுடன் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டனர். இறைவனுக்கு நன்றி என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா
விமானத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பு இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. சினாய் மாகாணத்தில் உள்ள தீவிரவாதிகளிடம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணை இல்லை என்கிறது ரஷ்யா.

இல்லை
விமானத்தை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது நம்பும்படி இல்லை என்று ரஷ்ய போக்குவரத்து துறை அமைச்சர் மேக்சிம் சோகோலோவ் தெரிவித்துள்ளார்.

சிரியா
சிரிய அதிபர் ஆசாதின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களை குறி வைத்து தாக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மீது புனிப் போர் துவங்கியுள்ளதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications