ஆயுதங்களை கீழ போடுங்க! உயிருக்கு உத்தரவாதம் கண்டிப்பா உண்டு! உக்ரைன் வீரர்களுக்கு ரஷ்யா கெடு
கீவ் : உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா துறைமுக நகரமான மரியுபோலை நகரை கைப்பற்றி உள்ளதாகவும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் தருகிறோம் என ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் நிலைமை அங்கு மிக மோசமாகி வருகிறது.
தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் பின்னடைவை சந்தித்த ரசியா துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டியது.

உக்ரைன் போர்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான மரியுபோல், உக்ரைனின் பொருளாதாரத்தில் அதிக பங்கு வகிக்கும் துறைமுகத்தையும் உள்ளடக்கியதாகும். இந்நிலையில் தான் அந்த நகரத்தை கைப்பற்ற மும்முனை தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. தொடர்ந்து ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியது. இதன் காரணமாக அங்கிருந்து மக்கள் துவக்கத்திலேயே வெளியேறினர்.

மரியுபோல் வீழ்ந்தது
இந்நிலையில் கருங்கடலை தளமாகக் கொண்டு ரஷ்ய கடற்படையால் முற்றுகையிடப்பட்ட தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் , ரஷ்ய அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் துருப்புக்கள் மரியுபோலின் நகர்ப்புற பகுதியை கைப்பற்றி விட்டதாகவும், உக்ரைன் போராளிகளின் ஒரு சிறிய குழு மட்டுமே சனிக்கிழமையன்று நகரத்தில் உள்ள ஒரு இரும்புத் தொழிற்சாலைக்குள் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேதனை
இதனிடையே மரியுபோலில் "நிலைமை மிகவும் கடினமாக உள்ளது" என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைன்ஸ்கா பிராவ்டா செய்தி இணையதளத்திற்கு தெரிவித்தார். "எங்கள் வீரர்கள் தடுக்கப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மனிதாபிமான நெருக்கடி உள்ளது. இருப்பினும், தோழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்." என கூறியுள்ளார்

ரஷ்யா கெடு
பெலாரஸில் இருந்து புறப்பட்ட ரஷ்ய போர்விமானங்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் பகுதியில் ஏவுகணைகளை வீசி நான்கு கப்பல் ஏவுகணைகளை உக்ரேனிய வான் பாதுகாப்புப் பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரஷ்யா கெடு விதித்துள்ளது. மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரப்படி) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும். சரண் அடையும் அனைவரின் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications