அணு உலையை மீண்டும் இயக்க ஆரம்பித்த வட கொரியா- படமெடுத்த அமெரிக்கா
வாஷிங்டன்: வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான செயற்கைக் கோள் புகைப்பட ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளுட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் நவீன சர்வதேச ஆய்வு கழகம் இது குறித்து கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரிய வந்தது. எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும். அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அணு உலையில், 6 கிலோ எடை கொண்ட புளுட்டோனியத்தை ஒரு வருடத்தில் தயாரிக்க முடியுமாம்.
இந்த தகவல் குறித்து ஐ.நாவின், சர்வதேச அணு சக்தி முகமை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க வெளியுறவுத்துறையி்ன் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்திற்கான செய்தித் தொடர்பாளர் இந்த தகவல் குறித்து பதிலளிக்க மறுத்து விட்டார். அதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச விவகாரங்கள் குறித்து விளக்கம் அளிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்றார். அதேசமயம், வட கொரியாவின் அணு சக்தித் திட்டம் தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது என்று மட்டும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 2005ம் ஆண்டு அணு ஆயுத ஒழிப்புக்கு மாற்றான உதவித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை வட கொரியா மதித்துநடக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா அரசு வலியுறுத்தி வருகிறது. தனது அணு ஆயுதத் திட்டத்தை வட கொரியா கைவிட்டால், அதற்குத் தேவையான மின்சாரத் தேவையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூர்த்தி செய்ய இது வழி வகுக்கும். ஆனால் அதை வட கொரியா மதிப்பதாக தெரியவில்லை என்றார்.
2006ம் ஆண்டு முதல் இதுவரை 3 அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது நினைவிருக்கலாம்.
கடந்த ஏப்ரல் மாதமே, யாங்பியான் அணு உலையை மீண்டும் இயக்கப் போவதாக வட கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல வருடமாக இந்த அணு உலையை மூடி வைத்திருந்தது வட கொரியா. மேலும் ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையின்போது அவர்களை சமாதானப்படுத்துவதற்காக 2008ம் ஆண்டு இந்த அணு உலையின் குளிர்விக்கும் கோபுரத்தைக் கூட அது இடித்தது.
ஆனால் தற்போது அந்த அணு உலையை அது இயக்க ஆரம்பித்திருப்பதாக வந்துள்ள செய்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.