13 நிபந்தனைகளை ஏற்றால் தடை நீக்கம்- கத்தாருக்கு அரபுநாடுகள் நிபந்தனை
கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க 13 நிபந்தனைகளை அரபு நாடுகள் விதித்துள்ளன.
குவைத் : கத்தார் நாட்டின் மீதான தடையை நீக்க செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள நிபந்தனைகளை அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் குவைத் கத்தாரிடம் தெரிவித்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாக காரணம் சொல்லி கத்தார் நாட்டுடனான ராஜாங்க ரீதியிலான உறவை செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன.
கடந்த ஜூன் 5ம் தேதி திடீரென இந்த தடையை விதித்ததோடு தங்கள் நாட்டு எல்லைக்கு மேல் கத்தார் நாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. கல்ஃப் நாடுகளின் திடீர் அறிவிப்பையடுத்து சமரசம் செய்யும் பணியை குவைத் செய்து வருகிறது.
இந்நிலையில் குவைத் மூலம் கத்தாருக்கு செளதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் 13 நிபந்தனைகளை விதித்துள்ளன. இது குறித்து அசோசியேட்டட் ப்ரெஸ் அரபு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து செய்தி வெளியிட்டுள்ளது.
நிபந்தனைகள் விவரம்:
- ஈரானுடனான உறவை துண்டிப்பதோடு, அவர்களுடன் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்ய வேண்டும். அமெரிக்கா மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே ஈரானுடன் வணிகம் செய்ய வேண்டும்.
- ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா மற்றும் லெபனானின் ஹிஸ்பொல்லா உள்ளிட்ட அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்க வேண்டும்
- அல்ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும்
- கத்தார் நிதியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்று நடத்தும் செய்தி நிறுவனங்களான அரபி 21, அல் - ஜதீத், மிட்டில் ஈஸ்ட் ஐ உள்ளிட்டவற்றையும் மூட வேண்டும்.
- கத்தாரில் உள்ள துருக்கி நாட்டுப்படையை திரும்ப அனுப்புவதோடு, அவர்களுடனான ராணுவ ஒப்பந்தங்களையும் கைவிட வேண்டும்.
- செளதி,பஹரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட தனி நபருக்கோ, அமைப்புகளுக்கோ நிதி உதவி செய்யக் கூடாது
- 4 நாடுகளால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டு தேடப்படுபவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களின் சொத்து மற்றும் பணபரிவர்த்தனையை உடனடியாக முடக்க வேண்டும்
- செளதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடனான தொடர்பை கத்தார் துண்டிக்க வேண்டும்.
- அண்மைக் காலமாக கத்தாரால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் உயிரிழப்புகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும்
- செளதி அரேபியாவால் 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று கல்ஃப் மற்றும் அரபு நாடுகளுடனான அரசியல், சமூகம், பொருளாதார நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
- 10 நாட்களுக்குள் இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.