நிபந்தனைகளை ஏற்க கத்தாருக்கு மேலும் 2 நாட்கள் கெடு... முடிவை சொல்ல நெருக்கடி!
கத்தார் மீதான தூதரக ரீதியிலான தடையை நீக்க சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகள் 2 நாட்கள் கெடு விதித்துள்ளன.
ரியாத் : தூதரக உறவுக்கான தடையை நீக்க வேண்டுமெனில் 13 நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என்று கத்தாருக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. முடிவை கூற கத்தார் நாட்டிற்கு மேலும் 48மணி நேரம் அவகாசம் கொடுத்துள்ளன.
ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி கத்தார் உடனான ராஜாங்க ரீதியிலான உறவை சவுதிஅரேபியா, பஹ்ரைன், எபிக்து, ஐக்கிய அரபு அமீரக்ம் உள்ளிட்ட நாடுகள் அறிவித்தனர்.
தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த குவைத் முயற்சித்து வந்தது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி 13 நிபந்தனைகள் கொண்ட பட்டியல் சவுதி அரபியா குவைத் மூலம் கத்தாருக்கு கொடுத்தது.
13 நிபந்தனைகள்
இதில் அல்ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும், ஈராக் உடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் துருக்கி நாட்டுப் படைகளை கத்தாரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அரபு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்தன. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியிருந்தன.
குவைத் கோரிக்கை
இந்த நிபந்தனைகளை ஏற்க கொடுத்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில் காலக்கெடுவை நீட்டிக்குமாறு குவைத் அரபுநாடுகளிடம் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று அவகாசத்தை நீட்டித்து அரபு நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
கெடு நீட்டிப்பு
இந்நிலையில் கத்தாருக்கு விதிக்கப்பட்ட கெடுவை மேலும் 48 மணி நேரம் நீட்டித்து சவுதி அரேபியா உள்ளிட்ட 4 அரபு நாடுகள் அறிவித்துள்ளன. எனவே 48 மணி நேரத்தில் நிபந்தனையை ஏற்பது குறித்த கட்டாயம் கத்தாருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்குமா கத்தார்?
ஏற்கனவே அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தை மூட உத்தரவிடுவது, ஜனநாயகத்தின் மீது திணிக்கப்படும் அடக்குமுறை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் அவர் முற்றிலும் மறுத்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு அரபு நாடுகளின் அனைத்து கோரிக்கைகளையும் கத்தார் ஏற்குமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.