கழிவறை என நினைத்து விமான கதவை திறக்க முயன்ற ஸ்காட்லாந்துகாரருக்கு ரூ.45,000 அபராதம்
லண்டன்: கே.எல்.எம். ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஸ்காட்லாந்து நபர் கழிவறை என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். இதனால் அவருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள அலோவா நகரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் கிரே. அவர் விடுமுறையை கழிக்க நெதர்லாந்தைச் சேர்ந்த கே.எல்.எம். ஏர்லைன்ஸ் விமானம் மூலம் எடின்பர்கில் இருந்து ஆம்ஸ்டர்டாம் கிளம்பியுள்ளார். விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார்.
கழிவறை கதவு என நினைத்து அவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் அவர் நெதர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விமானத்தின் கதவை திறக்க முயன்றதற்காக அவருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கே.எல்.எம். விமானத்தில் பயணம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜேம்ஸ் கூறுகையில்,
நான் கழிவறை என தவறாக நினைத்து விமானத்தின் கதவை தொடத் தான் செய்தேன். அதற்கே சிப்பந்திகள் வந்து என்னை எனது இருக்கையில் அமர செய்ததுடன் விமானம் தரையிறங்கியதும் நான் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவேன் என்றனர்.
தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை. விமானம் தரையிறங்கியதும் போலீசார் வந்து என்னை கைது செய்தனர். அபராத தொகையை செலுத்த நான் கடன் வாங்க வேண்டி இருந்தது.
மறுபடியும் அந்த விமானத்தில் பயணம் செய்ய எனக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளனர். இதனால் நான் வேறு விமானம் மூலம் ஸ்காட்லாந்து திரும்ப வேண்டி இருந்தது என்றார்.