இந்தியாவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்: அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: கடந்த ஆண்டு இந்தியாவில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரால் மக்கள் அவமதிக்கப்பட்டது தான் முக்கிய மனித உரிமை பிரச்சனைகளில் ஒன்று என் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2014ம் ஆண்டு இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தல் தான் உலக வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் ஆகும். சில வன்முறை சம்பவங்கள் நடந்தபோதிலும் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது.
போலீஸ்
இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த மனித உரிமை மீறல்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு துறையினரால் மக்கள் அவதிப்பட்டதும் அடக்கம். போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மக்களை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வன்முறை
பாலியல் பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், ஊழல், குற்றத்தை கண்டிக்காமை, கொலை, பழங்குடியினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள், ஜாதி, மதத்தின் அடிப்படையால் ஏற்பட்ட வன்முறை ஆகியவையும் இந்தியாவில் நடந்த மனித உரிமை மீறல்களாகும்.
மனித உரிமை மீறல்
மக்கள் திடீர் என மாயமாவது, மோசமான சிறைகள், முறையற்ற கைது நடவடிக்கை உள்ளிட்டவை பிற மனித உரிமை பிரச்சனைகள் ஆகும். நீதி கிடைப்பது மிகவும் தாமதம் ஆகுகிறது.
பெண்கள்
சில மாநிலங்களில் மதமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பலாத்காரம், வரதட்சணை கொடுமைகள்-கொலைகள், கௌரவக் கொலைகள், பாலியல் தொல்லை, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் குழந்தை திருமணம் ஆகியவை முக்கிய சமூக பிரச்சனைகள் ஆகும்.
கடத்தல்
ஆட்களை கடத்துவது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பது, குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவதும் பெரிய பிரச்சனைகள் என்று கெர்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.