வங்கியில் கொள்ளை- 7 பேர் சுட்டுக் கொலை... 6 வங்கதேச தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை!
டாக்கா: வங்கதேசத்தில் வங்ககியில் கொள்ளையடிக்கும் போது 7 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே வங்காளதேச வணிக வங்கி செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இந்த வங்கிக்குள் 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்தனர். வங்கியில் இருந்து சுமார் 7 லட்சம் டாக்கா (இந்திய மதிப்பில் ரூ .6 லட்சம்) பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், வங்கியின் மேலாளர் உள்பட 7 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இதனிடையே மக்களிடம் சிக்கிய ஒரு தீவிரவாதி அடித்துக் கொல்லப்பட்டார்.
பின்னர், விசாரணையின் போது இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் என தெரியவந்தது.
இந்த வழக்கை டாக்கா கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 6 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.