475 பயணிகளோடு மூழ்கிய கப்பல்... விபத்துக்கு பொறுப்பேற்று தென்கொரிய பிரதமர் ராஜினாமா
சியோல்: சமீபத்தில் நடந்த 475 பயணிகளோடு மூழ்கிய படகு விபத்துக்கு பொறுப்பேற்று தென்கொரிய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 16ம் தேதி 325 மாணவர்கள் உட்பட 475 பேரோடு தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்குச் சென்ற மிகப்பெரிய சொகுசு படகு ஒன்று எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 179 பேரை உயிருடன் மீட்டனர். இதுவரை 187 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. மாயமானவர்களை மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலுக்கடியில் படகிற்குள் இறந்து கிடக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகு விபத்திற்கான காரணம் ஆராயப் பட்டு வருகிறது. இது தொடர்பாக கப்பலின் கேப்டன் உட்பட நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அனுபவமில்லாத பெண் மாலுமி விபத்தின் போது கப்பலை இயக்கியதாகச் சொல்லப் படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்திற்கு பொறுப்பேற்று தென் கொரியாவின் பிரதமர் சங் ஹாங்-வான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், 'எதிர்பாராத விதமாக நடந்த இந்த படகு விபத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை, ஒரு நாட்டின் பிரதமர் என்கிற முறையில் இந்த பரிதாப விபத்திற்கு பொறுப்பேற்று எனது பதவியிலிருந்து விலகுகிறேன்.' எனத் தெரிவித்துள்ளார்.