தலிபான்களின் தாக்குதலில் 100 பயணிகளுடன் "ஜஸ்ட் மிஸ்" ஆன ஸ்பைஸ்ஜெட் விமானம்!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 100 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் கடந்த 3ம் தேதியன்று தலிபான்களின் தாக்குதலில் இருந்து தப்பியது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் டெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் சுமார் 100 பயணிகளுடன் ஜூன் 3ம் தேதி முற்பகல் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கிளம்ப தயாரானது.
அப்போது தலிபான் தீவிரவாதிகள் திடீரென்று காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ராணுவ விமானதளத்தை குறிவைத்து ராக்கெட்டை ஏவினார்கள். தலிபான்கள் வீசிய ராக்கெட் ராணுவ தளத்தையொட்டிய பகுதியை தாக்கியது.
இந்த தாக்குதலில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தப்பியது. இதனால் ஸ்பைஸ்ஜெட் விமானம் 3 மணி 20 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பாதுகாப்பாக டெல்லி வந்து சேர்ந்தது.
இதன் பின்னர் நேற்றும் காபூல் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனிடையே கிழக்கு உக்ரைனில் 295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திய ஸ்பைஸ்ஜெட்!:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் மீது தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.