"நீங்க பண்ண வரைக்கும் போதும்ப்பா".. சீனாவின் ஒப்பந்தத்திற்கு நோ.. உஷாரான இலங்கை
கொழும்பு: சீனாவின் அரசு விவசாய பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு மறைமுக திட்டங்கள் இருப்பதாகக் கூறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது.
இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா, தனது திட்டத்தை இலங்கையை கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படுத்த விரும்புகிறது.
இலங்கையில் பல்வேறு முதலீடுகளை செய்து அங்கு ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இந்தியாவும் இந்த விவகாரத்தில் கவனத்துடன் உள்ளது.

சீனாவின் உளவு கப்பல்
சமீபத்தில் கூட இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங் -5 என்ற கப்பல் நங்கூரம் இட்டு நின்றது. இதற்கு இந்தியாவும் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இலங்கைக்கு அதிக அளவில் கடன் வழங்கி தனது கைக்குள் போட முனையும் சீனா, அவ்வப்போது சில ஒப்பதங்களையும் மேற்கொண்டு தனது சதி வலையை விரிக்க நினைக்கிறது.

கையெழுத்து இட மறுப்பு
இந்த நிலையில், சீனாவின் அரசு விவசாய பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு மறைமுக திட்டங்கள் இருப்பதாகக் கூறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீசாத்குனார்ஜா, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். வளர்ச்சி திட்டங்கள் என்ற சாக்கில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விளைநிலங்களை அபகரிக்க சீனா மறைமுக திட்டத்துடன் இருப்பதாக கூறி கையழுத்து இட மறுப்பு தெரிவித்துஇருக்கிறார்.

மக்களின் விருப்பதற்கு மாறாக
முன்னதாக, மக்களின் விருப்பதற்கு மாறாக சீன அரசுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடக்கூடாது என்று மாணவர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. கடந்த மாதம் 28 ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை அரசின் ஆதரவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில்தான், சீனா பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

விவசாய உற்பத்தி நிலங்களுக்கு குறி
கையெழுத்திட மறுப்பு தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தரின் முடிவுக்கு பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கங்களும் நன்றி தெரிவித்துள்ளன. மேலும், ஏற்கனவே கடலில் வெள்ளரிப்பண்ணைகள் அமைப்பதாக கூறி நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் பகுதிகளை சீனா அபகரித்து விட்டதாகவும், தற்போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விவசாய நிலங்களை அபகரிக்கவும் சீனா வஞ்சக எண்ணத்துடன் திட்டமிடுவதகாவும் அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்படும் என்பதால் அதை சமாளிக்க விவசாய உற்பத்தி நிலங்களை குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications