உக்ரைன் மீட்பு பணி கஷ்டமாக இருந்தது.. பிரதமர் மோடி தலையீட்டால் வெற்றி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கீவ்:‛‛ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதால் தான் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்'' என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா மூலம் மீட்டது.
இதுகுறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மோடி அறிவுறுத்தலில்...
பிரதமர் நரேந்திர மோடியின் வழிக்காட்டலில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் கங்கா திட்டம் துவங்கப்பட்டது. ஆபரேஷன் கங்கா குறித்து தினமும் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்தியர்களை மீட்க 24 X 7 என மத்திய அரசு செயல்பட்டது. இந்த மீட்பு பணிக்கு அனைத்து ராணுவம், தேசிய பேரிடம் மேலாண்மை, இந்திய விமானப்படை, தனியார் விமான நிறுவனங்கள் உதவி செய்தன.

அறிவுரை வழங்கல்
உக்ரைனில் அதிகரித்து வந்த பதற்றத்தால் அங்குள்ள இந்தியர்கள் குறித்து ஜனவரில் இந்திய தூதரகம் பதிவு செய்ய துவங்கியது. 20 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். பதற்றம் அதிகரிக்கவே இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற பிப்., 15ல் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 20, 22ல் அறிவுரை கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 23க்கு முன்பாக உக்ரைனில் இருந்து 4 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறி இருந்தனர்.

22 ஆயிரம் பேர் மீட்பு
பிப்ரவரி 24ல் உக்ரைனில் ராணுவ நடவடிக்கை துவங்கியபோது இந்தியாவின் மீட்பு பணி நடைமுறையில் இருந்தது. போர் நடந்ததால் இது சவாலானதாக மாறியது. உக்ரைனில் இந்தியர்கள் நேரடி ஆபத்தில் இருந்தனர். பெரும்பாலானவர்கள் போர் நடக்கும் மையப்பகுதியில் சிக்கி தவித்தனர். 22 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பலானவர்கள் மருத்துவ மாணவர்கள். இவர்கள் அனைவரும் சவாலான சூழலில் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டினர் மீட்பு
மொத்தம் 90 விமானங்களில் மீட்பு பணி நடைபெற்றது. இதில் 76 தனியார் விமானங்கள், 14 இந்திய விமானப்படை விமானங்கள் அடங்கும். இதில் இந்தியர்கள் மட்டுமின்றி 18 நாடுகளை சேர்ந்த 147 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். இதுதவிர இந்திய குடும்பங்களை சேர்ந்த உக்ரைன் நாட்டினரும் மீட்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பு குழு
முன்னதாக இந்திய மாணவர்களை எல்லை தாண்ட அனுமதிக்க வேண்டும் என ருமேனியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து பிரதமர்களுடன் பேசி உதவி கோரினார். 4 மத்திய அமைச்சர்கள் மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்க அனுப்பி வைக்கப்பட்டனர். ருமேனியாவில் ஜோதி ஆதித்ய சிந்தியா, ஸ்லோவாகியாவில் கிரன் ரிஜூ, ஹங்கேரியில் ஹர்தீப் சிங் புரி, போலந்தில் விகே சிங் ஆகியோர் மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்தனர்.

பிரதமர் தலையீட்டால் சாத்தியம்
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் சில முறை பேசினார். கார்கீவ், சுமியில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து வலியுறுத்தினார். சுமியில் இருந்து மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது. இந்த மாணவர்களை மீட்க தற்காலிக போர் நிறுத்தம் தேவைப்பட்டது. போர் நிறுத்தம் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அல்லது மாணவர்கள் வெளியே வந்து ஆபத்தில் சிக்க வாய்ப்பு இருந்தது. எனவே, ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி போர் நிறுத்தத்தை உறுதி செய்தார். அவரது தலையீட்டால் மீட்புப் பணி சாத்தியமானது.
Recommended Video

நடவடிக்கை
இருப்பினும் கார்கீவ் நகரில் இறுதியாண்டு மருத்துவம் படித்த மாணவர் நவீன் உயிரிழந்துள்ளார். அவரது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. ஹர்ஜோத் சிங் என்பவர் கீவில் இருந்து வெளியேறும்போது குண்டு காயமடைந்தார். மருத்துவ செலவு ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் அவர் போலந்து எல்லை வழியாக டாக்டர் உதவியுடன் இந்தியா மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications