ஆப்கான் நாடாளுமன்றம் மீது தற்கொலைப் படை தாக்குதல்! 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!
காபூல்: ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று காலை கீழவை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு முதல் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.
இதனால் எம்.பி.க்கள் பதற்றமடைந்து தப்பி ஓடினர். நாடாளுமன்றத்தில் செய்தி சேகரித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை நேரடியாகவும் ஒளிபரப்பியன.
அவைக்குள்ளே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்தின் வெளியேவும் கார் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திலிருந்து அதிக அளவில் புகை கிளம்பியதை அடுத்து பொதுமக்களும் பீதி அடைந்தனர்.
புதிதாக பதவியேற்கும் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட போது, தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
FLASH: 3 explosions in Afghan parliament building as per local media reports. Parliamentarians being rescued, casualties feared.
— ANI (@ANI_news) June 22, 2015
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து எம்.பி.க்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் 6 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 21 பொதுமக்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.