புதுசுபுதுசா யோசிக்கிறாங்க! பள்ளிகளில் ‛டை’ கட்ட தடை! மாணவர், ஆசிரியர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் ‛டை' அணிந்து வர தடை விதித்து தாலிபான் அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவங்கினர். இந்த போரில் வெற்றி பெற்ற தாலிபான்கள் 2021 ஆகஸ்டில் ஆப்கனை முற்றிலுமாக கைப்பற்றினர்.
இதனால் தற்போது ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் உள்நாட்டு போர் மூலம் ஆட்சியை கவிழ்த்தது, பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்தது உள்ளிட்டவற்றால் தாலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
வறுமையிலும் கட்டுப்பாடுகள்
இதனால் ஆப்கனில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொதுமக்கள் வறுமையின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் உணவுக்காக அவர்கள் சிரமத்தை சந்தித்து வருவதாக பத்திரிகை செய்திகள் வெளியாகி உள்ளன. பொதுமக்கள் இவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தாலும் கூட தாலிபான்கள் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
‛டை’ அணிய தடை
அதன்படி தற்போது புதிய கட்டுபாடு ஒன்றை தாலிபான் அரசு அறிவித்துள்ளது. அதாவது பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ‛டை' அணியக்கூடாது என ஆப்கன் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி டை அணிய அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆப்கன் கல்வி அமைச்சகத்தின் செய்தி தொடார்பாளர் அஜீஸ் அகமது ராயான் கூறுகையில், ‛‛ பள்ளிகளில் டை அணிவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
பள்ளி செயல்படுவது எப்படி
ஆப்கனில் தற்போது 7ம் வகுப்பு வரை மட்டும் மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் சார்பிலும், மனித உரிமை, பெண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தாலிபான்கள் கண்டு கொள்ளவில்லை. தற்போது ஆப்கனில் 1 முதல் 7 வரை இருபாலரும், 7 முதல் 12 வரை மாணவர்கள் மட்டும் கல்வி பயின்று வரும் நிலையில் தான் இத்தகைய புது உத்தரவு ஆசிரியர்களுக்கும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய கட்டுப்பாடுகள் என்னென்ன
முன்னதாக விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க தடை, பூங்காக்களிலும் ஆண், பெண்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. சமீபத்தில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தாடியை ஷேவ் செய்ய கூடாது. நீண்ட தளர்வான சட்டை, பேண்ட்டுடன் (பைஜாமா, ஜிப்பா) பணி செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.