'எங்கள் வெற்றி மற்ற நாடுகள் மீது..படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம்'- வெற்றி பூரிப்பில் தாலிபான்கள்
காபூல்: ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் நேற்று முழுமையாக வெளியேறிய நிலையில், தாலிபான்களின் வெற்றி என்பது மற்ற நாடுகளில் படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம் என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவார்கள் என அதிபர் பைடன் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதன்படி அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறத் தொடங்கியது.
இதற்காகவே இத்தனை ஆண்டுகள் காத்திருந்த தாலிபான்கள் உடனடியாக ஆப்கன் ராணுவம் மீது தாக்குதல் நடத்தி ஆப்கனை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.

தாலிபான்கள்
இதனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெறும் ஒரு சில வாரங்களில் ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் கைப்பற்றியது. ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்கா வெளியேறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதியே தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். அதேநேரம் காபூல் விமான நிலையம் மட்டுமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

கடைசி வீரரும் கிளம்பினார்
நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி தான் அமெரிக்காவின் கடைசி வீரரும் ஆப்கனில் இருந்து வெளியேறினார். காபூல் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க வீரர்களை ஏற்றிக் கொண்டு கடைசி விமானம், ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை கிளம்பியது. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதைத் துப்பாக்கியால் சுட்டும் வானவேடிக்கைகள் நடத்தியும் தாலிபான்கள் கொண்டாடினர்.

படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம்
அப்போது விமான நிலையத்திலேயே செய்தியாளர்களிடம் பேசிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. தாலிபான்களின் வெற்றி என்பது மற்ற நாடுகளில் படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம்" என்றார்.

தாலிபான்கள் நல்லவர்கள்
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவை வைத்துக்கொள்ளவே விரும்புகிறோம். அவர்கள் அனைவருடனும் தூதரக உறவுகளை நாங்கள் வரவேற்கிறோம் தாலிபான் பாதுகாப்புப் படைகள் மென்மையானவர்களாகவும் நல்லவர்களாகவும் இருப்பார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்கள்
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியே தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். ஆனாலும்கூட காபூல் விமான நிலையம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆப்கனில் இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினரைத் தாயகம் அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இப்போது ஆப்கனில் 100 முதல் 200 அமெரிக்க மக்கள் வரை மட்டுமே உள்ளனர். அவர்கள் யாரும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதி செய்துள்ளார்.

காபூல் விமான நிலையம்
இன்று தான் காபூல் விமான நிலையம் முழுமையாகத் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப உதவும் வகையில் சிறப்பு விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து தொடர்ந்து இயக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தை யார் நடத்துவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காகத் தாலிபான்கள் துருக்கியிடம் உதவி கேட்டுள்ளது. ஆனால் இதுவரை துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தாலிபான்களின் கோரிக்கையை ஏற்பதாக அறிவிக்கவில்லை. மேலும், அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்டதால், தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காபூல் விமான நிலையத்திற்கு தங்கள் விமானங்களை இயக்க எந்த நிறுவனம் முன்வரும் என்பது குறித்தும் உடனடியாக தகவல் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications