அமெரிக்கா அதிபர் தேர்தல்.. டொனால்ட் டிரம்ப் வெல்வார் என நம்புவது தலிபான்கள்!
காபூல்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என தலிபான்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனும் களத்தில் உள்ளனர்.
அதிபர் தேர்தல் பிரசாரம் தீவிரமாக களைகட்டி வரும் நிலையில் எதிர்பாராதவிதமாக டிரம்ப்-க்கு ஒரு ஆதரவு கிடைத்திருக்கிறது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெல்வார் என நம்பிக்கையை தெரிவித்திருப்பது ஆப்கானிஸ்தான் தலிபான்கள்தான்.
அதிபர் தேர்தல்...கருத்துக் கணிப்பு... ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளி... ஜோ பைடன் சரித்திர சாதனை!!
டிரம்ப் வாக்குறுதிகள்
இது தொடர்பாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜஹிஹூல்லா முஜாஹித் கூறியதாவது: அமெரிக்கா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவராக டொனால்ட் டிரம்ப் திகழ்கிறார். சில சிறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தாலும் கூட மிகப் பெரிய வாக்குறுதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.
டிரம்ப் வெல்வார்
இதனால்தான் அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற சாத்தியங்கள் இருப்பதாக நம்புகிறோம். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை பொருளாதார சிக்கல்கள், அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகள் போன்றவற்றால் களைப்படைந்து போய்விட்டனர். அமெரிக்காவின் உள்நாட்டு நிலைமையை சீர்படுத்தக் கூடியவராக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக டிரம்ப் இருக்கிறார்.
ஆப்கானில் இருந்து படைகள் விலக்கம்
ஜோ பைடனைப் - ஜோ பிடனைப் பொறுத்தவரையில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே அள்ளி வீசுகிறார். அதனையே தேர்தல் முழக்கங்களாக முன்வைக்கிறார். டிரம்ப் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ஜஹிஹூல்லா முஜாஹித் கூறியிருக்கிறார்.
டிரம்ப் அறிவிப்புக்கு வரவேற்பு
சில நாட்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் மிகச் சிறிய அளவிலான அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். அதிபர் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்காக குடும்பங்களுடன் இணைந்து கொள்வார்கள் என அமெரிக்கா படை விலக்கம் குறித்து கூறியிருந்தார். இதனை வரவேற்ற தலிபான்கள், தோஹாவில் உருவாக்கபட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த படிநிலை இது என குறிப்பிட்டிருந்தனர்.