நிறுத்துங்க! சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் துன்புறுத்தல்! பாகிஸ்தானை கடுமையாக கண்டித்த இந்தியா
கராச்சி: பாகிஸ்தான் கராச்சி அருகே கோரங்கி பகுதியில் இந்து கோவில் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், தெய்வ சிலைகள் சேதப்படுத்துவதையும் மர்மநபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கராச்சி பகுதியில் உள்ள கோவில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் இந்து கோவில், சிலைகள் சேதம்! டூவீலர்களில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்! பதற்றம்
கோவிலை தாக்கி சிலைகள் சேதம்
அதாவது கராச்சி கோரங்கியில் உள்ள ஸ்ரீமாரிமாதா கோவிலில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் தெய்வங்களின் சிலைகளை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டதை துணிகள் கட்டி மறைத்தனர்.
போலீஸ் விசாரணை
முதற்கட்ட விசாரணையில் 6 முதல் 8 நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவிலில் நுழைந்து சிலைகளை தாக்கி உடைத்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்கள் எதற்காக உடைத்தனர் என்பன போன்ற விஷயங்கள் தெரியவில்லை. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயத்தில் மக்கள்
இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கோரங்கி பகுதியில் உள்ள கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளதோடு, பயத்துடன் இருப்பதாக தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா கண்டனம்
இந்நிலையில் கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: சமீபத்தில் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இந்து மத வழிபாட்டுதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பற்றி கவனத்தில் கொண்டுள்ளோம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மதத்தினர் மீது நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான துன்புறுத்தல்களில் இதுவும் ஒன்று என நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பான எங்கள் எதிர்ப்பை பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்துள்ளோம். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்யும்படி அந்நாட்டு அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது' என்றார்.