11 ஆண்டு கால பயணம் முடிந்தது.. எரிபொருள் தீர்ந்து புதன் கிரகத்தில் விழுந்து நொறுங்கிய ‘மெசஞ்சர்’!
மியாமி: புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலமான ‘மெசஞ்சர்', தனது 11 ஆண்டுகால இலக்கை நிறைவு செய்தது. எரிபொருள் தீர்ந்த நிலையில், புதன் கிரகத்திலேயே மெசஞ்சர் விழுந்து நொறுங்கியதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு புதன் கிரகத்தை ஆராய்வதற்காக நாசா அனுப்பிய ஆளில்லாத விண்கலம் ‘மெசஞ்சர்'. 513 கிலோ எடையும், மூன்று மீட்டர் நீளமும் கொண்ட இந்த விண்கலம், புதன் கிரகம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில், தனது 11 ஆண்டுகால இலக்கை பூர்த்தி செய்த மெசஞ்சரில் எரிபொருள் தீர்ந்து போனது. இறுதியாக மணிக்கு 8,750 மைல்வேகத்தில் புதன் கிரகத்தின் மீது மோதி நொறுங்கியது. இது ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு அதிகமாகும்.
இந்த நிகழ்வு இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மெசஞ்சர் மோதிய வேகத்தில், புதன் கிரகத்தின் மீது டென்னிஸ் மைதானம் அளவுக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த பள்ளத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications