கண்ணைக் கட்டிக் கொண்டு கயிற்றில் நடந்து 3 கட்டிடங்களைக் கடந்து சாதனை.. அமெரிக்காவில்!
சிகாகோ: அமெரிக்காவில் கண்களை கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்து 3 அடுக்குமாடி கட்டிடங்களை கடந்து சாதனை புரிந்துள்ளார் ஒருவர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் நிக் வாலென்டா . 35 வயதான இவர் ஆபத்து பற்றி சற்றும் கவலைப்படாமல், ஆபத்தான செயல்களில் ஈடுபடும் முரட்டுத் துணிச்சல் உடையவர்.
ஏற்கனவே இவர் பள்ளத்தாக்கு மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சியை மிக உயரத்தில் கண்களை கட்டிய படி கயிற்றில் நடந்து கடந்து சாதனை படைத்துள்ளார்.
மூன்று அடுக்குமாடிக் கட்டிடங்கள்:
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் 3 அடுக்கு மாடி கட்டிடங்களை இது போன்று நடந்து புதிய சாதனை நிகழ்த்தினார்.
கயிற்றில் நடந்து சாதனை:
சிகாகோ ஆற்றின் இடையே இரு புறத்திலும் உள்ள 500 அடி உயரமான அதாவது 152 மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்தபடி கடந்தார்.
ஒரு நிமிடத்தில் "கிராஸிங்":
முதலில் மரினா சிட்டி வெஸ்ட் டவர் மற்றும் லியோ பர்னெட் கட்டிடங்கள் இடையே 7 நிமிடத்தில் நடந்தார். அதை தொடர்ந்து மற்றொரு கட்டிடத்தை ஒரு நிமிடத்தில் கடந்தார்.
வலை பாதுகாப்பு கிடையாது:
அப்போது தனது கண்களை துணியால் கட்டி இருந்தார். பாதுகாப்புக்காக கீழே வலை போன்ற பாதுகாப்பு சாதனம் எதுவும் அமைக்கவில்லை.
சாதனை முறியடிப்பு:
உயிரை பணயம் வைத்து இச்சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே தான் நிகழ்த்திய 2 உலக சாதனைகளையும் அவரே முறியடித்தார். இவரது இச்சாதனை 220 நாடுகளில் டெலிவிஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பபட்டது.
ஏழாவது தலைமுறை சர்க்கஸ்க்காரர்:
இதை சுமார் 50 ஆயிரம் பேர் திகிலுடன் கண்டு ரசித்தனர். இவர் வாலென்டாஸ் சர்க்கஸ் கம்பெனியின் 7 ஆவது தலை முறையை சேர்ந்தவர் ஆவார்.