சிரியாவுக்குள் நுழைந்து ராணுவ வீரர்களை மீட்ட துருக்கி!! கைகோர்த்த பரம எதிரியான குர்து படை!!
கோபானே: சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் இருக்கும் துருக்கிக்கு சொந்தமான சுலைமான் ஷா நினைவிடத்தில் சிக்கிய ராணுவ வீரர்களை அதிரடியாக அந்நாட்டு ராணுவம் மீட்டிருக்கிறது. இந்நடவடிக்கையில் 30 ஆண்டுகாலமாக துருக்கியுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் குர்து படையினரும் கை கோர்த்திருப்பது அப்பிராந்தியத்தில் திருப்புமுனையாக கருதப்படுகிறது.
ஒட்டாமன் சாம்ராஜ்யத்தை நிறுவிய உஸ்மான் மன்னரின் பாட்டனார் சுலைமான் ஷாவின் நினைவிடம் தற்கால சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் உள்ளது. சர்வதேச ஒப்பந்தப்படி இது துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இதனால் அந்நினைவிடத்தில் துருக்கி தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு, அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இந்த நினைவிடம் அருகே உள்ள கோபானே பகுதியானது ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமானது.
இதனால் சுலைமான் ஷா நினைவிடப் பாதுகாப்பில் ஈடுபட்ட துருக்கி வீரர்கள் நிலைமை கேள்விக்குறியானது. இதனிடையே அமெரிக்கக் கூட்டுப் படையினர் உதவியுடன் குர்து படையினர் கோபானே நகரை மீட்டபோதிலும் துருக்கி வீரர்கள் நினைவிடத்தில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று கருதப்பட்டது.
இதனால் கடந்த சனிக்கிழமை இரவு சிரியாவுக்குள் இரு வழிகளில் உள்ளே நுழைந்த துருக்கி ராணுவம் தனது வீரர்களை பாதுகாப்பாக மீட்டதுடன் சுலைமான் ஷாவை அடக்கம் செய்த பெட்டகத்தையும் துருக்கிக்கு எடுத்துச் சென்றது. மேலும் அந்த நினைவிடக் கட்டடம் தகர்க்கப்பட்டது.
Suleyman Shah tomb evacuation coordinated with the #YPG. The operation was planned with the Turkish army 4 days in advance.
#TwitterKurds
— PYD (@pydinfo) February 22, 2015
இந்நடவடிக்கையில் சுமார் 600 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நூறு பீரங்கிகள், மற்றும் கவச வாகனங்கள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியவையும் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
இதனிடையே துருக்கியின் இந்நடவடிக்கைக்கு சிரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களது நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்கிறது சிரியா. ஆனால் குர்து படையினரோ, எங்களுடன் 30 ஆண்டுகாலம் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் துருக்கி தற்போது எங்களுடன் கை கோர்த்து இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நிச்சயம் திருப்புமுனைதான் என்கிறது.
இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் துருக்கி முக்கியப் பங்கு வகிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.