இனி வெளிநாடுகளில் "அரபு ஷேக்" டிரஸ் போடாதீங்க... எமிரேட்ஸ் மக்களுக்கு அரசு அட்வைஸ்!
துபாய்: வெளிநாடுகளில் தங்கள் நாட்டு பாரம்பரிய ஆடையை அரேபியர்கள் அணிய வேண்டாம் என்று ஐக்கிய அரேபிய அமீரகம் அறிவுறுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் என தவறாக நினைத்து அப்பாவி மக்கள், தாக்குதலுக்கு உள்ளாவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
தலையை சுற்றி தலைப்பாகை போலவும், உடல் முழுவதையும் மூடும் வகையிலும், வெள்ளை நிறத்தில் அரேபியர்கள் ஆடை அணிவது வழக்கம். இதை 'ஷேக் டிரஸ்' என குறிப்பிட்டு பல தமிழ் திரைப்படங்களில் காட்சிகள் வந்துள்ளன.
இந்நிலையில், அரபு நாட்டை சேர்ந்த அஹமது அல் மென்ஹாலி (41) என்பவர், மருத்துவ சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். ஓஹியோ மாநிலத்தின் அவான் பகுதியில் உள்ள உணவகத்துக்கு அவர் சென்றபோது, அவரது உடையை கண்ட அந்த ஓட்டலின் வரவேற்பாளர் ஐ.எஸ். தீவிரவாதியாக இருக்கலாம் என சந்தேகித்தார்.
இதையடுத்து, அவர் உடனடியாக போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அஹமதுமீது தாக்குதல் நடத்தி, கீழே தள்ளி, கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர். உரிய விசாரணைக்கு பின்னர் அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருப்பது தெரியவந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார்.
தன்னை தரக்குறைவாக நடத்திய ஓட்டல் வரவேற்பாளர் மற்றும் போலீசார்மீது வழக்கு தொடரப் போவதாக அஹமது அல் மென்ஹாலி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்ற தங்கள் நாட்டின் குடிமகனை அவமரியாதையாக நடத்தியதற்காக அமெரிக்க அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அரேபிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.