அமெரிக்க செய்தியாளர் உக்ரைனில் சுட்டுக் கொலை.. ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றச்சாட்டு
கீவ்: அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் போர் 3ஆவது வாரமாகத் தொடர்கிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் உயிரிழந்துள்ள அமெரிக்கச் செய்தியாளர் ப்ரென்ட் ரெனாட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது
உக்ரைன் நாட்டில் உள்ள இர்பின் என்ற நகரில் செய்தியாளர் ப்ரென்ட் ரெனாட் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த இரு செய்தியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ப்ரென்ட் ரெனாட் உடலில் நியூயார்க் டைம்ஸ் அடையாள அட்டை இருந்துள்ளது. இதையடுத்து அவர் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் என முதலில் தகவல் பரவியது. இதையடுத்து நியூயார்க் டைம்ஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தில் பிரென்ட் ரெனாட் பங்களிப்பாளராக (contributor) பணியாற்றியதாகவும் இருப்பினும், அவர் உக்ரைனில் பணி அமர்த்தப்படவில்லை என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு ரஷ்ய ராணுவமே காரணம் என உக்ரைன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும், என்ன நடந்தது எனத் தெளிவான தகவல்கள் இல்லை.