எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐநா அட்வைஸ்
நியூயார்க்: இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லைப் பகுதியில் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டு பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி தக்க பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் அமைத்திருந்த 7 முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானே துஜாரிக் கூறுகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வரும் பதற்றமான நிலையை ஐ.நா. தொடர்ந்து மிகவும் கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் அறிவோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.