இலங்கை போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம்: ஐ.நா. திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
ஜெனீவா: இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சையத் அல் உசைன் தனது சிபாரிசில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், தமீழ் ஈழ விடுதலை புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில், வடக்கு மாகாணங்களில் வசித்த தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக தலைவர்கள் பலரும், இறந்தது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. அதன் அறிக்கையை ஆணையர் சையத் அல் உசைன் இன்று சமர்ப்பித்துள்ளார்.
அதில் சில பரிந்துரைகளை அவர் முன்வைத்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும் குற்றங்களும் நடந்துள்ளன.
- இலங்கையில் தற்போது அமைந்துள்ள புதிய அரசின் நல்லெண்ண நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளன. ஆனால், இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச மக்களுக்கும், இந்த அரசு தனது நல்லெண்ண நடவடிக்கைகளை வெளிப்படுத்தி காட்ட வேண்டியது அவசியம்.
- ஏதோ ஒரு சில குற்றங்களுக்கு தண்டனை அளித்துவிட்டால் கடமை முடிந்துவிடாது. மீண்டும் இதுபோன்ற மோசமான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க அவர்களது வருங்காலம் சூறையாடப்படாமல் இருக்க வேண்டுமானால், இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதாது.
- இலங்கை மீது நம்பிக்கை பிறக்க வேண்டுமானால், அவர்களின் உள்நாட்டு கட்டமைப்பை கொண்டு அதை நிரூபிக்க முடியாது. தாங்கள் பெற்ற பாடத்தை வைத்தும், பிற நாடுகளில் பின்பற்றப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை பார்த்தும், இலங்கை தனது பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும்.
- போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். அதில் ஒருங்கிணைந்த சர்வதேச நீதிபதிகள், பல நாடுகளை சேர்ந்த விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட வேண்டும். அதுபோன்ற விசாரணை நடந்தால்தான், இலங்கையில் வாழும் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நம்பிக்கை பிறக்கும்.
- இலங்கை பல்வேறு சமூகத்தினர் கொண்ட நாடு. அங்கு இதுபோன்ற விசாரணைதான் பொருத்தமாக இருக்கும். அதுபோன்ற விசாரணையை ஏற்படுத்த ஐ.நா போதிய உதவிகள் செய்ய தயாராக உள்ளது. இலங்கை நாட்டில், போர்க்குற்றங்கள் போன்ற பெரிய குற்றங்களை தாங்களே விசாரிக்கும் கட்டமைப்பு கிடையாது. எனவே சிறப்பு நீதிமன்றம் அவசியம்.
- இலங்கையில் நடைபெறும் மீள்குடியேற்ற பணிகளை கண்காணிப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடர்ச்சியாக பங்காற்ற வேண்டும். பன்னாட்டு சமூகங்களும், இலங்கையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications