இங்கிலாந்து, ஸ்வீடனால் சட்டவிரோதமாக அசாஞ்சே தடுத்து வைப்பு என ஐநா குழு தீர்ப்பு- பிபிசி தகவல்
லண்டன்: இங்கிலாந்து மற்றும் ஸ்வீடனால் சட்டவிரோதமாக லண்டனில் அசாஞ்சே தடுத்து வைக்கப்பட்டதாக ஐநா குழு தீர்ப்பு அளித்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இதையடுத்து உலக நாடுகள் அவரை வேட்டையாட தொடங்கின.
ஸ்வீடனில் அசாஞ்சேவுக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. இதனால் அசாஞ்சே இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் நிலை உருவானது.
இதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்துக்குள் தஞ்சமடைந்தார் அவர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஈக்குவடார் தூதரகத்தில்தான் தஞ்சமடைந்திருந்தார் அசாஞ்சே. அவருக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஈக்குவடார் முன்னர் அறிவித்திருந்தது.
அந்த தூதரகத்தை விட்டு வெளியேவந்தால் உடனே இங்கிலாந்து போலீசால் கைது செய்யப்படும் நிலை நீடித்தது. இப்படி ஸ்வீடனும் இங்கிலாந்தும் இணைந்து தம்மை ஈக்குவடார் தூதரகத்துக்குள் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஐநாவிடம் அசாஞ்சே புகார் செய்தார்.
அசாஞ்சேவின் இந்த புகார் மீதான தீர்ப்பு நாளை வர உள்ளது. அதற்கு முன்னதாக, தம்முடைய இணையப் பக்கத்தில் ஐநா குழுவின் தீர்ப்பு தமக்கு எதிராக இருந்தால் இங்கிலாந்து போலீஸ் என்னை கைது செய்யட்டும் எனத் தெரிவித்திருந்தார் அசாஞ்சே.
இந்நிலையில் அசாஞ்சேவை ஈக்குவடார் தூதரகத்திலேயே முடக்கியது சட்டவிரோதம் என ஐநா குழு தீர்ப்பளித்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இருந்தபோதும் அசாஞ்சே ஈக்குவடார் தூதரகத்தை விட்டு வெளியே வந்தால் எப்படியும் கைது செய்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது இங்கிலாந்து. இதனால் "அசாஞ்சே பரபரப்பு" மீண்டும் ஏற்பட்டுள்ளது.