ஏவுகணை தாக்குதல் அச்சம்! சிரியா வான் எல்லையில் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை!!
வாஷிங்டன்:உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவின் வான்பகுதியில் தனது நாட்டு பயணிகள் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மூலமாக சிரிய, நாட்டு பாதுகாப்பு படை விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள ஆயுதங்கள் குறித்து சர்வதேச ஆயுத ஆய்வு குரூப் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்ட ஏவுகணைகள் தீவிரவாதிகளிடம் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதை பரிசீலித்த அமெரிக்க விமான நிர்வாக அமைப்பு, தனது நாட்டு விமானத்தை சிரிய நாட்டு வான் எல்லைக்கு மேல் பறக்க முற்றிலும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே பல அமெரிக்க விமானங்கள் சிரியாவின் சில பகுதிகளின் மேல் பறப்பதை தவிர்த்து வந்த நிலையில், தற்போது, சிரிய வான் எல்லையை முற்றிலும் தவிர்க்க அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் சுட்டு மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேம்படுத்தியுள்ளன.