அமெரிக்கா தரும் தடுப்பூசிகள் ஒரு நாள் தேவைக்கே போதாது.. இந்தியாவிற்கு ஏமாற்றம்தான்
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்புவதாக உறுதியளித்துள்ள போதிலும் கூட அந்த தடுப்பூசிகளின் அளவு மிகமிக குறைவு என்பதால் நமது தேவைக்கு அது போதாது என்ற சூழ்நிலை நிலவுகிறது.
அமெரிக்க அரசு 80 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை, வெளிநாடுகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளது அதில் முதல்கட்டமாக 25 மில்லியன் டோஸ்கள் அனுப்பப்படும்.
இந்தியா, கனடா, மெக்சிகோ, மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், அமெரிக்காவின் அண்டை நாடுகள், நட்பு நாடுகள் ஆகியவற்றிற்கும் கொரோனா நோய் பரவல் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா தடுப்பூசிகளை அனுப்ப சம்மதித்துள்ளது. இதில் ஒரு பங்குதான் இந்தியாவுக்கு கிடைக்கும்.

கோவேக்ஸ் அமைப்பு
அதுதவிர கோவேக்ஸ் அமைப்புக்கு அமெரிக்கா அனுப்பக்கூடிய தடுப்பூசிகளிலிருந்து இந்தியாவின் பங்காக ஏழு மில்லியன் அதாவது 70 லட்சம் அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவை கோவாக்சின் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. உலக நாடுகள் அனைத்துக்கும் சமமாக தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 80 மில்லியன் தடுப்பூசிகளின் 75 சதவீதத்தை கோவாக்சின் அமைப்புக்கு வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

பல பங்கு
அமெரிக்கா முதல்கட்டமாக அனுப்பும், 25 மில்லியன் தடுப்பூசி டோஸ்களில் 19 மில்லியன் கோவாக்ஸ் மூலமாக பிற நாடுகளுக்கு சென்றடையும். சராசரியாக தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு 6 மில்லியன் (60 லட்சம்) டோஸ்கள், ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் டோஸ்கள், ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளுக்கு 5 மில்லியன் டோஸ்கள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் தாமதமான முயற்சிகள்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் தடுப்பூசி தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார். அமெரிக்காவில் உள்ள தடுப்பூசி நிறுவனங்களான ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையையும், மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவிற்கு போதாது
இந்தியாவின் சீரம் நிறுவனம் அதிக அளவு தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இவை அனைத்துமே தற்போதைய நிலைமையை சரி செய்ய உதவாது என்பதுதான் கசப்பான உண்மை. இதற்கு காரணங்கள் உள்ளன. அமெரிக்க தடுப்பூசிகளை இந்தியாவில், உள்ளூர் டிரையல் இன்றி நேரடியாக செலுத்த சமீபத்தில் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இழப்பீடு தொடர்பான விவகாரங்கள் முடிவெடுக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களுக்கு ஏதாவது மோசமான விளைவுகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்பதில் முடிவெடுக்க சிக்கல் நீடிக்கிறது.

அமெரிக்கா தருவது ஒரு நாளைக்கு போதாது
"அமெரிக்கா, இந்தியாவுக்கென்று சிறப்பாக அதிக தடுப்பூசிகளை தரவில்லை. அமெரிக்கா தடுப்பூசி வழங்கும், ஆசிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் விளைவாக, இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் அமெரிக்க தடுப்பூசி டோஸ் மொத்தமே 20 லட்சம் அல்லது 30 லட்சத்திற்கு(2 மில்லியன் அல்லது 3 மில்லியன்) அதிகமாக இருக்காது" என்று ஒரு பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி தெரிவித்தார். இந்தியா இப்போது, ஒரு நாளைக்கு சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்போகும் தடுப்பூசி, ஒரு நாள் தேவையைத்தான் பூர்த்தி செய்ய உதவும். இதில் பெரிதாக சந்தோஷப்பட எதுவும் இல்லை. கோவாக்ஸ் மூலமாக கிடைக்கப்போகும் அமெரிக்க தடுப்பூசி அளவும் 3 நாட்களுக்குத்தான் போதும்.

விண்ணப்பமே இல்லை
இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எவ்வளவு விரைவாக விநியோகிக்க முடியும் என்பதும் தெளிவாக இல்லை. ஜூன் 1 ம் தேதி மத்திய அரசு தனது தடுப்பூசி டிரையல் தொடர்பான முந்தைய உத்தரவை திருத்தியது. அதன்படி, அமெரிக்க எஃப்.டி.ஏ, உலக சுகாதார அமைப்பு, யுனைடெட் கிங்டம், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் அனுமதி பெற்ற அனைத்து தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் தரப்படுகிறது. இருப்பினும், ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அன்டு ஜான்சன் ஆகிய, மூன்று அமெரிக்க நிறுவனங்களும் இன்னும் தடுப்பூசி சப்ளைக்கு விண்ணப்பிக்கவேயில்லை. தற்போது, இந்தியா கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications