அமெரிக்க தேர்தல்... 48 ஆண்டுகளாக ஒரு சென்டிமென்ட் கணிப்பு.... இவங்களோட சாய்ஸ் யார்?
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி நாள்தோறும் நகர்தோறும் கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இங்கும் ஒரு தலைப்பட்சமான சார்பு நிலை கணிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு கருத்துக் கணிப்பு ட்ரம்ப் தோல்வி என்றால், இன்னொரு கணிப்பு நேர் எதிராக, ட்ரம்ப் அமோக வெற்றி என்று சொல்கிறது. இந் நிலையில் 48 ஆண்டுகளாக, நியூயார்க்கில் உள்ள பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஆரம்பப் பள்ளி, சின்னஞ்சிறார் மாணவர்களிடம் மாதிரி தேர்தல் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இதுவரையிலும் அந்த பள்ளி மாணவர்களின் முடிவுகள் போலத்தான், அதிபர் வேட்பாளர்களின் வெற்றியும் அமைந்துள்ளது. கே.ஜி வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம், இரண்டு வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் சில மாதங்களாக பகிர்ந்து வரப்பட்டுள்ளது. வேட்பாளர் A , B என்று மட்டும்தான் அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
பள்ளியின் முதல்வர் பேட்ரிசியா மூர் கூறுகையில், வேட்பாளர்கள் பற்றிய உண்மை தகவல்களும், அடிப்படைப் பிரச்சனைகளில் அவர்களின் நிலைப்பாடுகள் மட்டுமே தெரிவிக்கப்படும். இறுதியில் மாணவர்கள் மாதிரி தேர்தலில் வாக்களிக்கிறார்கள். இந்த ஆண்டு நடந்த மாதிரி தேர்தலில் 277 வாக்குகள் பெற்று 52 சதவீதத்துடன் ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் 230 வாக்குகளுடன் 43 சதவீதத்தில் தோல்வியுற்றுள்ளார். 48 ஆண்டுகால பாரம்பரியம் மீண்டும் நிருபணம் ஆகுமா? பொதுத் தேர்தலில் ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெறுவாரா? 12 மணி நேரத்தில் தெரிந்து விடும்..