அமெரிக்கா போறீங்களா... அப்ப விமான நிலையத்துல பொறுமையா காத்திருக்கனும்!
அமெரிக்கா செல்வோருக்கு நாளை முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
வாஷிங்டன் : நாளை முதல் அமெரிக்கா செல்லும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு ஆளாக்கப்படும் முறை அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் விமானப் பயணிகள் லேப்டாப் எடுத்து செல்கின்றனரா என்றும் தீவிரமாக கண்காணிப்பட உள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக எட்டு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகள் லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை கொண்டு வருவதற்கு அமெரிக்கா தடை விதித்தது.
அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள், பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் மின்னணு உபகரணங்களை சோதிக்க 105 நாடுகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவை என்ற நிலையை உருவாக்கின.விமான சேவை நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும், அல்லது அவ்விமானப் பயணிகளின் அனைத்து மின்னணு உபகரணங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் கூறி இருந்தது.
180 விமான சேவை நிறுவனங்கள் பாதிக்கும்
இந்நிலையில் இந்த புதிய நடவடிக்கைகளை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் தினசரி 3 லட்சத்து 25,000 பயணிகளைச் சுமந்து செல்லும், சராசரியாக 2,100 விமானங்கள், 280 விமான நிலையங்களையும், 180 விமான சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
எகானமி வகுப்பு பயணிகள்
மடிக்கணினி விவகாரத்தை பொறுத்தவரைக்கும் விமான சேவை நிறுவனங்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஏனென்றால், இந்த புதிய நடவடிக்கைகள் அதிக பணம் செலுத்தி பயணிக்கும் எகானமிக் வகுப்பு வாடிக்கையாளர்களை விமானப் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் என்ற அச்சங்கள் நிலவின.
லுப்தான்ஸா அறிவுறுத்தல்
இந்த புதிய விதிகள் குறித்து விளக்கம் அளித்துள்ள லுப்தான்ஸா குழும விமான நிறுவனம் இந்த சோதனையின் போது பயணிகளிடம் செக் இன் கேட் அதாவது உள் நுழையும் வாசலில் வைத்து சிறிய நேர்காணல் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. எனவே 90 நிமிடங்கள் முன்னதாகவே செக் இன் செய்யுமாறு எகானமி பிரிவு பயணிகளை லுப்தான்ஸா சுவிஸ் ஏர்லைன் கேட்டுக் கொண்டுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி
இதே போன்று மற்றொரு ஏர்வேஸ் நிறுவனமான கேத்தே பசிபிக் ஏர்வேஸ் அமெரிக்காவிற்கு நேரடி விமானத்தில் புக் செய்யும் பயணிகள் தாங்கள் கையில் ஒரு பையை வைத்துக் கொள்ளும் வசதியை நிறுத்தி வைத்துள்ளன. மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான நேர்காணல் நடைபெறும் என்றும் எனவே 3 மணி நேரம் முன்னதாகவே பயணிகள் விமான நிலையம் வந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.