சிட்னி மோதலில் கர்ப்பிணி தோழியை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த வழக்கறிஞர் கத்ரீனா டவ்சன்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதியிடம் பிணைக் கைதியாக சிக்கிய போது தமது கர்ப்பிணி தோழியைப் பாதுகாக்க முயற்சித்த வழக்கறிஞர் கத்ரீனா டவ்சன் பலியாக நேரிட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிட்னியின் லின்ட் ஃகேப் ஹோட்டலில் நேற்று காலை துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதி ஹாரூன் மோனிஸ், 17 பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டான். அவன் சிரியாவைச் சேர்ந்த சபாத் அல் நுஸ்ரா அமைப்பின் கொடியையும் ஹோட்டல் ஜன்னல் கதவுகளில் ஒட்டி வைத்துக் கொண்டான்.

அவனிடம் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பி வெளியே ஒடி வந்தனர். எஞ்சியவர்களை மீட்பதற்காக 17 மணிநேரத்துக்குப் பின்னர் ஆஸ்திரேலியா நேரப்படி அதிகாலை 2 மணிக்கு போலீசார் அதிரடித் தாக்குதலை நடத்தி ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அப்போது தீவிரவாதியுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பின்னர் பாதுகாப்பாக 11 பேரை போலீசார் மீட்டனர். இம்மோதலில் தீவிரவாதி ஹாரன் மோனிஸ் மற்றும் இரு பொதுமக்கள் உயிரிழந்தனர். இவர்களில் கத்ரீனா டவ்சன் என்ற வழக்கறிஞரும் ஒருவர். 38 வயதான டவ்சன், சிட்னியின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர். கத்ரீனா டவ்சனும் அவரது வழக்கறிஞர்களும் காபி குடிப்பதற்காக ஹோட்டலுக்குச் சென்ற நேரத்தில் தீவிரவாதியிடம் சிக்க நேர்ந்தது.
கத்ரீனாவுடன் தீவிரவாதியின் பிடியில் சிக்கியவர்களில் அவரது கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரும் ஒருவர். போலீசாரின் மீட்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டில் இருந்து கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரைக் காப்பாற்றும் முயற்சியில் கத்ரீனா படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்ரீனாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் பையன்.
கர்ப்பிணி தோழியைக் காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த கத்ரீனாவின் மரணம் அவரது சக வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications