விமானத்தில் குலாப் ஜாமுன் எடுத்து செல்ல தடை.. தாய்லாந்தில் இந்தியர் செய்த ‛‛சம்பவம்’’.. நெகிழ்ச்சி
பாங்காக்: தாய்லாந்தில் உள்ள பூகெட் விமான நிலையத்தில் இந்திய பயணியை குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்து செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இந்திய பயணி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது.
விமான பயணத்தின்போது பொதுமக்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், துப்பாக்கி, தோட்டாக்கள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட பல பொருட்களை பாதுகாப்பு காரணங்களுக்காக எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து அதுதொடர்பான பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

தாய்லாந்தில் இந்திய பயணி
அந்த வகையில் தான் தாய்லாந்து நாட்டின் பூகெட் விமான நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் என்பவர் சென்றார். விமான பயணத்துக்காக விமான நிலையத்துக்குள் நுழைந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு டப்பா இருந்தது. அந்த டப்பாவை அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.

குலாப் ஜாமுனுக்கு அனுமதி மறுப்பு
அதில் குலாப் ஜாமுன் இருந்தது. இதனை எடுத்து செல்லக்கூடாது என அதிகாரிகள் கூறி தடுத்தனர். இதை கேட்ட ஹிமான்ஷு தேவ்கன் மாற்று வழியில் யோசித்தார். டப்பாவில் இருந்த குலாப் ஜாமுனை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். இதையடுத்து அவர் விமான நிலையத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் குலாப் ஜாமுனை வழங்கினார். அதனை மகிழ்ச்சியாக அதிகாரிகள் சுவைத்து மகிழ்ந்தனர்.

வெளியான வீடியோ
இந்நிலையில் இந்த சம்பவத்தை ஹிமான்ஷு தேவ்கன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதன்பிறகு இந்த வீடியாவை ஹிமான்ஷு தேவ்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‛‛இன்றைய நாளின் ஆரம்பம்'' என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛பாதுகாப்பு தொடர்பான சோதனையின்போது அதிகாரிகள் குலாப் ஜாமுனை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நாங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம்'' என கூறியுள்ளார்.

பொதுமக்கள் பாராட்டு
இந்த வீடியோவில் ஹிமான்ஷு தேவ்கன் வழங்கும் குலாப் ஜாமுனை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் எடுத்து சுவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications