வட கொரிய அதிபரை 37 நாட்களாக காணவில்லை? எங்க அந்த 'குழந்தை சாமி'!
பியொங்யாங்: வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜோங் உன், உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 37 நாட்களாக அவர் யார் கண்ணிலும் படாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது.
இளம் அதிபர், கிம் ஜோங் உன் தலைமையிலான வட கொரியாவில் ராணுவப் புரட்சி நடைபெறுவதாகவும், அதிபர் உடல் நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அங்கு உள்நாட்டு குழப்பம் நடைபெறுவதாகவும், தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
அந்த தகவலுக்கேற்பதான் அந்த நாட்டில் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வட கொரியாவில், தொடர்ந்து மூன்று அரசு நிகழ்ச்சிகளில் அதிபர் கிம் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை. அதையடுத்து, அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
எபோலோவால் தாக்கப்பட்டிருக்கலாமா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாமா என்பது போன்ற யூகங்கள் அங்கு பரவியுள்ளன. 37 நாட்களாக அதிபர் பொது இடங்களில் காணப்படவில்லை என்றபோதிலும், அவர் நலமாக இருப்பதாக மட்டும், வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையை பயன்படுத்தி பகைநாடான தென்கொரியா, தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் வட கொரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.