ஜூலை 1ம் தேதி முதல் ரஷ்ய அதிபர் புடின் 'மாயம்'.. வரிசையாக நிகழ்ச்சிகள் ரத்து.. மர்மம் நீடிப்பு
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து தனது கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை ரத்து செய்து வருகிறார். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காததால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வருபவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று என்பதாலும், அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டாலும், புடினை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளன.
புடினின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உலக ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட நபர் திடீரென மாயமானால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காதல்லவா.
1ம் தேதி முதல்
விளாடிமிர் புடின் கடைசியாக பின்லாந்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். ஜூலை 1ம் தேதிக்கு பிறகு புடினை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை.
ஒத்திவைப்பு
கடந்த 5ம் தேதி சுற்றுலாத்துறையுடன் தான் மேற்கொள்ள இருந்த சந்திப்பை தேதி குறிப்பிடாமல் புடின் ஒத்தி வைத்துள்ளார்.
அடுத்த நிகழ்ச்சி
கடந்த புதன்கிழமை நடைபெற நான்காவது சர்வதேச விளையாட்டு போட்டிகளில் புடின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அதிலும் கடைசி நேரத்தில் புடின் பங்கேற்கவில்லை.
நேற்றும் ஒத்தி வைப்பு
இரும்பு மற்றும் சுரங்க நிறுவனத்தை நேற்று, புடின் சுற்றி பார்ப்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிபர் தரப்பு
இதுகுறித்து, ரஷ்ய ஊடகங்கள், புடினின் உதவியாளரை தொடர்பு கொண்டு கேட்கையில், ''விளாடிமிர் சர்வதேச அளவிலான வர்த்தக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை அவர் உலகின் பார்வைக்கு வெளிப்படுவார் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.
வதந்திகள்
புடின் திடீரென மாயமாகியுள்ளது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன. அமெரிக்காவுக்கு எதிராக போரை தொடங்க அவர் ராணுவ அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என்பது வரை இந்த வதந்திகள் போய்க் கொண்டுள்ளன.