தென்னாப்பிரிக்காவில் உளவு பார்த்த 'ஒயிட் விடோ' சமந்தா
கேப் டவுன்: கென்யா வெஸ்ட்கேட் மால் தாக்குதலுக்கு பின்னால் இருக்கக்கூடும் என்று கூறப்படும் ஒயிட் விடோ சமந்தா லூத்வெய்ட் தென்னாப்பிரிக்க தலைநகரில் வெளிநாட்டு தூதரகங்களை நோட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
அண்மையில் கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் மாலுக்குள் அல் ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 3 இந்தியர்கள் உள்பட 67 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பின் அல் கொய்தா தீவிரவாதியான இங்கிலாந்தைச் சேர்ந்த விதவை பெண்ணான சமந்தா லூத்வெய்ட்(29)
இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கு எதிராக இன்டர்போல் கடந்த வாரம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சமந்தாவை ஒயிட் விடோ என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமந்தா இந்த ஆண்டின் துவக்கத்தில் போலி பாஸ்போர்ட்டில் தென் ஆப்பிரிக்கா சென்றது தெரிய வந்துள்ளது. அவர் ப்ரிடோரியாவின் ஆர்கேடியா பகுதியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உள்ளிட்ட தூதரகங்களை நோட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
சமந்தா குறித்து இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் தென்னாப்பிரிக்க யூத சங்கத்தை எச்சரித்துள்து. மேலும் தென்னாப்பிரிக்க போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தான் சமந்தாவை கண்டுபிடிக்க தவறிவிட்டனர்.
முன்னதாக சமந்தா கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு இடையிலான காலத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். நடாலி ஃபாயே வெப் என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இந்த வழக்கிலும் அவர் தேடப்பட்டு வருகிறார்.